ஸ்டாலின் மேசையில் ரிப்போர்ட்! உலக தரத்தில் அப்படியே மாறும் சாலைகள்.. கிராம, நகர சாலைகளை மாற்ற முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 285 கிராமப்புற சாலைகள் மற்றும் 141 பாலங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை மனுக்களை வாங்கிய ஸ்டாலின், அதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என்று கூறினார். 100 நாட்களில் மக்களின் குறைகளை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து லட்சக்கணக்கில் ஸ்டாலினிடமும், திமுக நிர்வாகிகளிடமும் மனுக்கள் குவிந்தன. மக்கள் பலர் தங்கள் குறைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் தற்போது மக்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற புதிதாக தனி துறையே உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் முன்பு வாங்கப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் வேகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தனி துறை, ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
இந்த கோரிக்கைகள் 90 சதவிகிதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுக்க அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து அதை களைய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
ஸ்டாலின் கடிதம்: ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனுப்பலாம் என்று ஸ்டாலின் கூறி இருந்தார்.
நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு. தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே அதிமுக எம்எல்ஏக்கள் உட்பட பலரும் இந்த கோரிக்கைகளை அனுப்பி இருந்தனர்.

சாலை பணிகள்: பலரும் சாலை வசதி தொடர்பாக கோரிக்கைகளை வைத்து இருந்தனர். அதேபோல் மக்கள் பலர் அளித்த மனுவில் கூட இதேபோல் சாலை பணிகளை பற்றி குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் 285 கிராமப்புற சாலைகள் மற்றும் 141 பாலங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நபார்டு-கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2023-24ன் கீழ் 285 கிராமப்புற சாலைகள் மற்றும் 141 பாலங்களை மேம்படுத்த தமிழக அரசு ₹781 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டங்களில் 35 பாலங்கள் மற்றும் 13 சாலைகள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளாகும். கிராமப்புற அமைப்புகளுக்கு 308 கோடி ரூபாய் நிதியையும் அரசு அனுமதித்துள்ளது.












Click it and Unblock the Notifications