தீபாவளி ஷாப்பிங்கிற்கு.. தி நகர், பாண்டி பஜார் போறீங்களா? பைக், காரில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: மாதக்கணக்கில் போக்குவரத்து நெரிசலால் அவதியுற்ற தி.நகர் வாகன ஓட்டிகளுக்கு இனி நிம்மதி பெருமூச்சு விடலாம்... தி நகரில் மீண்டும் வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, பாண்டி பஜார் அருகே அமைந்துள்ள ஆறு அடுக்கு பல மாடி வாகன நிறுத்துமிடத்தின் இரண்டு தளங்களை பெருநகர சென்னை மாநகராட்சி மீண்டும் திறந்துள்ளது.
வாகன ஓட்டிகள் முதல் மூன்று மணிநேரத்திற்கு இலவசமாக 78 இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதி 222 கார்கள் மற்றும் 513 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டது. இந்த வசதி இனி சென்னை மாநகராட்சியின் நேரடி பராமரிப்பில் இருக்கும்.

சென்னை பார்க்கிங்
தனியார் யாருக்கும் இதை குத்தகைக்கு விட முடியாத நிலையில் இந்த பார்க்கிங் வசதி திறக்கப்பட்டு உள்ளது. தியாகராயா சாலையில் வாகன நிறுத்துமிட கண்காணிப்பாளர்களை நியமித்து, பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்த ஊக்குவிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பாக பாண்டி பஜாரில் நிறுத்தப்பட்டு இருக்கும் பைக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. நடைபாதையில் பார்க் செய்யப்படும் பைக்குகள் அகற்றப்படும் பணிகள் இனி தினசரி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பாக தி நகரில் தெருக்களில் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ₹75 முதல் ₹100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தி நகர் பகுதியில் போக்குவரத்தை குறைக்க வரி, கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே அங்கே உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கான.. MLCP பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கே மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதை மக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.
கார் பார்க்கிங் கட்டணம்
இது போக சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது.
சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுவதால் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் படையை தமிழ்நாடு அரசு இங்கே களமிறக்கி உள்ளது. பார்க்கிங் மாற்றம்: சென்னையில் பல இடங்களில் சாலைகளில் வாகனங்களை பார்க்கும் செய்யும் வழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் எந்த இடத்தில் யார் பார்க் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளத. இந்த புதிய பிரச்சனையை தீர்க்க புது பார்க்கிங் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது.
சென்னை பார்க்கிங்
அதன்படி முதல் கட்டமாக சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படையாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன. சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க்கும் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தமிழ்நாடு அரசு சமீபத்தில் இது தொடர்பாக உறுதி அளித்துள்ளது.
சென்னையில் மக்கள் விதிமுறைகள் இல்லாமல் ஆங்கங்கே பார்க் செய்வதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இறுதிக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் அப்போது பேசுகையில், சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இறுதிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து நிறுவனம் (சியுஎம்டிஏ) மோட்டார் வாகன பார்க்கிங் கொள்கை வரைவு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகளைப் பெற்று மூன்று மாதங்களுக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications