நடிக்கிறதே வேஸ்ட்.. ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்ணுறாங்க! தமிழக அரசு விருது பற்றி அஸ்வந்த் ஆதங்கம்
சென்னை: (Tamil Nadu Government Film Awards)தமிழ்நாடு அரசின் சார்பில் 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது பெறாத சில கலைஞர்களின் ஆதங்கம் மற்றும் விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளாகியுள்ளது. அந்த வரிசையில், குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பெரும் கவனம் பெற்றுள்ளது.
சண்டைகோழி 2 திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஸ்வந்த் அசோக்குமார், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஐரா, மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்ததோடு, சின்னத்திரை மூலம் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் வைரலானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனது புத்திசாலித்தனமான பேச்சால் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில், தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அஸ்வந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், "இந்த விருதில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காவது கிடைக்கும் என்று நம்பினேன். அது கிடைக்கவில்லை. மை டியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. தேர்வுக்குழுவினர் இம்மாதிரி படங்களை பார்க்கிறார்களா? என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே?"
மக்கள் நீங்கள் எல்லோருமே என்னுடைய படத்தை பார்த்திருப்பீங்க என்று நினைக்கிறேன். உண்மையில் நீங்களே சொல்லுங்கள் என்னுடைய நடிப்பு அந்த படங்களில் எப்படி இருந்தது? அந்த சின்ன வயதில் அதற்காக நான் நடித்து சரியாக இருந்ததா? இல்லையா? எனக் கேட்டு வருத்தத்துடன் வீடியோவை முடித்திருந்தார்.
அஸ்வந்தின் இந்த ஆதங்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "அந்த வயதில் அத்தனை இயல்பாக நடித்ததே பெரிய விஷயம்", "விருது கிடைக்காததால் உன் திறமை குறையாது", "இன்னும் நீ நீண்ட தூரம் செல்ல வேண்டிய கலைஞன்" போன்ற கருத்துகள் ரசிகர்களிடமிருந்து குவிந்து வருகின்றன.
இது மட்டுமின்றி, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விருதுகளில் இயக்குநர் பா. ரஞ்சித் உட்பட சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் தமிழக அரசு விருதுகள் வழங்கும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் ஒரு சிலருக்கு மட்டும் விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமாரின் வீடியோ, ஒரு தனிப்பட்ட மனவருத்தமாக மட்டுமல்லாமல், தமிழக அரசு திரைப்பட விருதுகள் குறித்த பெரிய விவாதமாக மாறியுள்ளது. விருதுகள் என்பது கலைஞர்களுக்கான ஒரு அங்கீகாரம் என்றாலும், அதையே ஒரே அளவுகோலாகக் கொண்டு திறமையை மதிப்பிட முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில், சிறந்த கலைஞர்களுக்கு உரிய நேரத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் இந்த விவாதத்தின் மூலம் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications