குத்தகை பணம் விவகாரத்தில் டிவி நடிகை ராணிக்கு சம்மன்.. நாளை நேரில் ஆஜராவாரா? காஸ்ட்லி கார் என்னாச்சு
சென்னை: கரூரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் உரிமையாளரிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள உயர்ரக காரை ஏமாற்றி எடுத்துச் சென்று திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக, சின்னத்திரை நடிகை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளைய தினம் நடிகை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்ராஜ்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவர் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஸ்டார் ஓட்டலை சொந்தமாக நடத்தி வருகிறார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (எ) பாலமுருகன் (50) என்பவர் இவரை கடந்த மே மாதம் சந்தித்துள்ளார். அவருடன் அவரது நண்பர் புருசோத்தமனும் கரூர் வந்திருந்தார். பாலமுருகனின் மனைவி ராணி (45) சின்னத்திரை நடிகையாக பணியாற்றி வருகிறார்.
குத்தகை பணம்
இந்த சந்திப்பின்போது, நட்சத்திர ஓட்டலை ஒரு வருடத்திற்கு தனது நண்பர் புருசோத்தமன் பெயரில் குத்தகைக்கு எடுக்க விருப்பம் இருப்பதாக பாலமுருகன் கூறியுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் குத்தகை தொகை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு வருடத்திற்கு ஓட்டலை குத்தகைக்கு வழங்கும் பத்திரமும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பேசியபடி ரூ.10 லட்சம் குத்தகை தொகையை பாலமுருகன் தராமல் காலதாமதம் செய்ததால், ஹோட்டலை ஒப்படைக்க தினேஷ்ராஜ் மறுத்துள்ளார். இதையடுத்து, தினேஷ்ராஜ் வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி காரை தனது மனைவியிடம் காட்டிவிட்டு உடனே கொண்டு வருவதாக சொல்லி, பாலமுருகன் அந்த காரை எடுத்து சென்றுள்ளார்.
ஸ்டார் ஹோட்டல் ஓனர்
அதுமட்டுமல்ல, காரை எடுத்து சென்ற பாலமுருகன் மறுபடியும் திரும்பி வரவில்லை. அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோதும், தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தினேஷ்ராஜ், கடந்த 2ம் தேதி சென்னை வளசரவாக்கம் சென்று பாலமுருகனை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது, பாலமுருகன், அவரது மனைவி ராணி, நண்பர் புருசோத்தமன் ஆகியோர் சேர்ந்து தினேஷ்ராஜை தரக்குறைவாக பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்ராஜ், கடந்த 16ம் தேதி கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரூ.10 லட்சம் காஸ்ட்லி கார்
அந்த புகாரில், ரூ.80 லட்சம் மதிப்புள்ள உயர்ரக காரை பாலமுருகன் ஏமாற்றி எடுத்துச் சென்றதாகவும், அந்த காருக்குள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரத்தோடு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன், அவரது மனைவி ராணி மற்றும் நண்பர் புருசோத்தமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். BNS 296(b), 115(2), 316(5), 318(4), 351(3) உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது
நாளை நேரில் ஆஜராகி விளக்கம்
இந்த வழக்கு சம்பந்தமாக நேற்றைய தினம் புருஷோத்தமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. மேலும், இது சம்பந்தமாக பாலமுருகன், அவரது மனைவி சின்னத்திரை நடிகையான ராணி ஆகியோர் நாளைக்குள் அதாவது டிசம்பர் 31ம் தேதிக்குள் விசாரணைக்காக நேரில் கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
எனவே நாளைய தினம் நடிகை ராணி ஆஜராகி விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராணி தற்போது தலைமறைவாக உள்ளாராம்.. எனவே அவரை தேடும் படலமும் நடந்து வருவதாக தெரிகிறது.
'அலைகள்' சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை ராணி. அதன்பிறகு, 'அத்திப்பூக்கள்', 'முன் ஜென்மம்', 'வள்ளி', 'குலதெய்வம்' என பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லியாக நடித்து சீரியல்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர். வில்லி கேரக்டரை தவிர்த்து, பாசிட்டிவ் கேரக்டரில் 'ரோஜா' சீரியலில் நடித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications