விஜய் பற்றி நான் ஆரம்பத்தில் அப்படி பேசி இருக்க கூடாது.. மன்னிப்பு கேட்ட சேரன்! ஆனால், வந்த பிரச்சனை புதுசு
சென்னை: இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள திடீர் பதிவு பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் மீது கடுமையாக விமர்சனங்கள் வைத்திருந்த சேரன், தற்போது அவர் குறித்து வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஆனால் இந்த மன்னிப்பு பதிவை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இன்னும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2026 தேர்தல் முடிவுகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியபோது, தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது. முதல் தேர்தலிலேயே இப்படிப்பட்ட வெற்றியை பதிவு செய்ததால், விஜய் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாக அவரது ரசிகர்களும் தவெக தொண்டர்களும் கொண்டாடினர். குறிப்பாக மே 7ஆம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.
விஜய்யின் வெற்றி
ஆனால் அரசியல் கணக்கு வேறு விதமாக மாறியது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இன்னும் கிடைக்காததால், விஜயை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் பதவியேற்பு விழா தொடர்பான ஏற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்கியுள்ளதால், தவெக கூட்டணியின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற தவெக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் கூட விஜய்க்கு ஆதரவு அளிக்கலாம் என்ற அரசியல் பேச்சுகளும் பரவி வருகின்றன.
சேரன் பதிவு
இப்படி வெற்றி பெற்றும் உடனடியாக முதலமைச்சராக முடியாமல் அரசியல் சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் தான் சேரனின் பதிவு வெளியாகியுள்ளது. தனது சமூக வலைத்தள பதிவில் அவர், "சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களின் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் தவெக தலைவர் விஜய்யை மனமுவந்து வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான் எனது மகிழ்ச்சி. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் கருத்து
இந்த பதிவு வெளியாகிய உடனேயே சமூக வலைத்தளங்களில் கலவையான எதிர்வினைகள் உருவாகின. சிலர் சேரனின் நேர்மையை பாராட்டினாலும், பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"தேர்தலுக்கு முன்பு விஜயை தொடர்ந்து விமர்சித்து வந்தவர், இப்போது அவர் ஆட்சிக்கு வரப்போகிறார் என்று தெரிந்ததும் திடீரென்று ஆதரவு தெரிவிக்கிறாரா?", "ஆரம்பத்தில் கேலி செய்து விட்டு இப்போது மன்னிப்பு கேட்பது ஏன்?", "விஜய் வெற்றி பெற்ற பிறகுதான் உண்மை புரிந்ததா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சிலர், "விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்று நினைத்தவர்கள் இப்போது அவரின் வளர்ச்சியை பார்த்து திடீரென்று நிலைப்பாடு மாற்றுகிறார்கள்" என்றும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக "இப்போது மட்டும் திடீர் கரிசனம் வந்துவிட்டதா?" என்று சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
இதற்கிடையில், விஜய் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் சூழ்நிலையும் பெரிய பேசுபொருளாகியுள்ளது. மக்கள் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றிருந்தாலும், சட்டமன்றத்தில் தேவையான எண்ணிக்கை இல்லாததால் முதலமைச்சர் பதவி இன்னும் அவரிடம் இருந்து தள்ளியே உள்ளது. இதனால் தவெக அலுவலகத்தில் தொடர்ந்து அவசர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் ரசிகர்கள் "மக்கள் தீர்ப்பு விஜய்க்கு வந்துவிட்டது" என்று கூறி வர, இன்னொரு பக்கம் அரசியல் கூட்டணி கணக்குகள் அவரை இன்னும் காத்திருக்க வைக்கிறது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியாத நிலை, தமிழக அரசியலில் அரிதாக பார்க்கப்படும் சூழ்நிலையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சேரன் வெளியிட்டுள்ள மன்னிப்பு பதிவு, விஜயின் அரசியல் வளர்ச்சியை சினிமா பிரபலங்களே தற்போது வேறு பார்வையில் பார்க்க தொடங்கிவிட்டார்கள் என்பதற்கான சான்றாகவும் பேசப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் மட்டும் இன்னும் சேரனை மன்னிக்க தயாராக இல்லை என்பது சமூக வலைத்தள கருத்துகளில் தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications