‘சிறை’ல கலங்க வைத்த அக்ஷய்… இப்போ புது படத்தில் ஹீரோ அவதாரம்! அதுவும் கூட்டணியே மாஸா இருக்கு!
சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருப்பார்கள். பெரிய விளம்பரம் இல்லாமலே, ஒரு கதாபாத்திரம் மூலம் நேரடியாக ரசிகர்களை தொட்டுவிடுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான 'சிறை' படத்தில் அப்துல் என்ற கைதி வேடத்தில் நடித்த எல்.கே. அக்ஷய் குமார், முதல் படத்திலேயே பாராட்டுகளை குவித்த நடிகராக மாறினார்.
விக்ரம் பிரபு நடித்த 'சிறை' படத்தில், செகண்ட் ஹீரோ என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட வேடத்தில் அக்ஷய் நடித்த விதம் பலரையும் கவனிக்க வைத்தது. அதிக வசனம் இல்லாமல், பார்வை, உடல் மொழி, அமைதியான நடிப்பு மூலமாகவே அந்த கதாபாத்திரத்தின் வலியை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக, சிறைச்சாலைக்குள் நடக்கும் சில காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. "புது முகம் போல தெரியவே இல்லை", "நடிப்பு ரொம்ப மெச்சூர்டா இருக்கு" என்பதே பலரின் கருத்தாக இருந்தது.
இந்த நல்ல வரவேற்புக்குப் பிறகே, அக்ஷய் குமார் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி விஜய்யின் 'மாஸ்டர்', 'லியோ' போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த எஸ்.எஸ். லலித் குமார் அவர்களின் நிறுவனம் என்பதால், இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேலு இயக்குகிறார். கதாநாயகனாக அக்ஷய் குமாருக்கு ஜோடியாக, 'டியூட்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ஷர்மா நடிக்கிறார். மேலும், ஜாபர் சாதிக், ஷாரிக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின் பணியாற்றுகிறார்.
சிறப்பு என்னவென்றால், இந்தப் படமும் 'சிறை' போலவே கிராமத்து பின்னணியில் அமைந்த ஆக்ஷன், காதல் கதையாக உருவாகிறது. அதனால், அக்ஷய் குமாரின் இயல்பான நடிப்பு மீண்டும் இந்தப் படத்திலும் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜை ஜனவரி 22, 2026 அன்று நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜனவரி 26, 2026 - குடியரசு தினத்தன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுவே தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
'சிறை' படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து மனதில் இடம்பிடித்த அக்ஷய் குமார், இப்போது முழு படத்தையும் தாங்கும் ஹீரோவாக எப்படி மாறப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. முதல் படத்திலேயே இயல்பான நடிப்பால் நம்பிக்கை கொடுத்த அவர், இந்த ஹீரோ அறிமுகப் படத்தில் அந்த நம்பிக்கையை இன்னும் உயர்த்துவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications