இந்தியாவில் ஆசிரியர் தினம்

மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப்படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கன வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை
ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. பொதுவாக இந்நாள் அக்டோபர் மாதம் 06 ம் தேதி அநேக நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதி 1888ம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார். அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக 1946-52ம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியை மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.












Click it and Unblock the Notifications