செயற்கையாக விலை சரியச் செய்யப்படும் தங்கம்...
இதுதவிர கடும் நிதிப் பற்றாக்குறையில் உள்ள சைப்ரஸ் நாடு தன்னிடம் உள்ள தங்கத்தை உலக சந்தையில் வந்து கொட்டி விற்க ஆரம்பித்துள்ளது. இதனாலும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.
1960களில் இருந்தே தங்கத்தின் விலை எப்போதெல்லாம் பயங்கர உச்சத்துக்குப் போய் தடாலடியாக சரிந்திருக்கிறதோ அப்போதெல்லாம் பொருளாதாரத் தேக்கம் நாடுகளை சுழற்றியடித்திருக்கிறது. இது 1980ல் நடந்தது.. 2008லும் நடந்தது.
ஆனால், தங்கத்தின் விலை இந்த முறை செயற்கையாகவே சரியச் செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சில நிபுணர்கள். இதில் உலகின் முன்னணி Bullion Banks எனப்படும் மொத்த தங்க விற்பனை வங்கிகள், ஹங்கேரியைச் சேர்ந்த அமெரிக்க முதலீட்டாளரான George Soros போன்ற பெரும் பணக்காரர்களான (இவர் உலகின் 22வது பெரும் பணக்காரர், ஹங்கேரியில் கம்யூனிசத்தை ஒழித்து கேபிடலிசத்தை அறிமுகப்படுத்தியவர்) சில முதலீட்டாளர்கள் கூட்டு சேர்ந்து தங்கத்தின் விலையை சரியச் செய்வதாகவும் புகார்கள் உள்ளன.
தங்களிடம் உள்ள பெருமளவிலான தங்கத்தை சந்தையில் கொட்டிவிட்டு விலையை சரியச் செய்து வருவதாகவும், இதன்மூலம் தங்கத்தின் மீதான தங்களது முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு டாலர்களில் முதலீடுகளை அதிகரித்து லாபம் பார்த்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் டாலர்களில் இருந்து தங்கத்துக்கு தங்களது முதலீட்டை இடம் மாற்றி, மீண்டும் தங்கத்தின் விலையைக் கூட்டச் செய்து, இந்த 'சுழற்சியில்' இவர்கள் பெரும் லாபம் அடைய திட்டமிடுவதாகவும் சொல்கிறார்கள்.