FACT CHECK: எந்த சாதியாக இருந்தாலும் 10% ஒதுக்கீடு பலன் தரும்? அண்ணாமலை பரப்பிய செய்தி! உண்மை என்ன?
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு எந்த மதமாக, சாதியாக இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருப்பவர்களுக்கு பலன் அளிக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக தமிழ்நாடு பாஜக ட்விட் ஒன்றை பகிர்ந்து உள்ளது .
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் நேற்று முதல்நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதில் 5ல் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
தலைமை நீதிபதி லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பாட் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், இடஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
சென்னையில் ராமர் கோயிலை திமுக அரசு இடித்ததாக பாஜக நிர்வாகி பகிர்ந்த வீடியோ- Fact Check
அண்ணாமலை
இந்த இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், இந்த இடஒதுக்கீடு காரணமாக யாருக்கும் பாதிப்பு இருக்காது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் இந்த இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர். பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. அவர் கொண்டு வந்த இடஒதுக்கீடு இது. இதை பாஜக எப்போதும் வரவேற்கும்.
தீர்ப்பு
இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். இதை வைத்து விஷமத்தனமான பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் பரப்பி வருகிறார்கள். திமுக மூலம் இதற்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து இப்படித்தான் இவர்கள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்தனர். இப்போது இந்த உயர் வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை வைத்து தவறான பிரச்சாரம் செய்கிறார்கள்.
பாதிப்பு இருக்காது
இந்த தீர்ப்பால் பி.சி., எம்.பி.சி., உள்ஒதுக்கீடு பாதிக்காது. அது மாறாமல் அப்படியே இருக்கும். எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. இதை வைத்து திமுகதான் விஷ பிரச்சாரம் செய்து வருகிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். இதில் அண்ணாமலை சொன்னதாக தமிழ்நாடு பாஜக ட்விட் ஒன்றை பகிர்ந்து உள்ளது. அதில், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த மதமாக, சாதியாக இருந்தாலும், பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருப்பவர்களுக்கு பலன் அளிக்கும், என்று அண்ணாமலை கூறியதாக குறிப்பிட்டு உள்ளனர்.
உண்மை என்ன
ஆனால் , இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த மதமாக, சாதியாக இருந்தாலும், பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருப்பவர்களுக்கு பலன் அளிக்கும் என்ற கூற்று தவறு. அது குறிப்பிட்ட சாதி பிரிவினருக்கு மட்டுமே பலன் அளிக்கும். இடஒதுக்கீடு பெறாமல் 8 லட்சம் வருட வருமானத்திற்கு குறைவாக பெறும் பிராமணர்களுக்கு பலன் அளிக்கும். அதேபோல் இந்த இடஒதுக்கீடு நாயர், செட்டியார், மலங்கரா கிறிஸ்தவர்; லப்பை, ராவுத்தர் என 79 ஜாதிகளுக்கும் பலன்தரக் கூடியது.
எல்லா சாதியுமா?
ஆனால் பாஜக தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளது போல எல்லா சாதிக்கும் எல்லாம் பலன் கொடுக்காது. முக்கியமாக எஸ்.டி, எஸ்.சி, எம்.பி.சி. பி, சி ஆகியோருக்கு இந்த இடஒதுக்கீடு பலன் அளிக்காது. இன்னும் சொல்லப்போனால் சாதி ரீதியான உள் இடஒதுக்கீட்டில் இருந்து கொண்டு 8 லட்சம் வருடம் வருமானம் வாங்கினால் அவர்கள் கிரிமி லேயரில் இடஒதுக்கீடு பெற முடியாமல் போகும். ஆனால் பொருளதார இடஒதுக்கீட்டிற்கு மட்டும் 8 லட்சம் வருட வருமானம் என்ற நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Fact Check
வெளியான செய்தி
உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு எந்த மதமாக, சாதியாக இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருப்பவர்களுக்கு பலன் அளிக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக தமிழ
முடிவு
எந்த மதமாக, சாதியாக இருந்தாலும், பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருப்பவர்களுக்கு பலன் அளிக்கும் என்ற கூற்று தவறு. அது குறிப்பிட்ட சாதி பிரிவினருக்கு மட்டுமே பலன் அளிக்கும்.