Fact Check: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் சேலம் ஆசிரியர் கைதா? பரவும் வதந்தியின் பின்னணி
சேலம்: சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கலியுக கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டதால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக மட்டும் மும்மொழி கொள்கையை வரவேற்று வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும் என்பதை தெளிவுப்படுத்தி விட்டார். அதுமட்டுமின்றி மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்வதாக அவர் சாடி உள்ளார்.
அதேவேளையில் பாஜகவினரோ, ‛‛மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. தமிழ், ஆங்கிலத்துடன் வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை படிப்பது தான் மும்மொழி கொள்கை'' என கூறிவருகின்றனர். இதுதொடர்பாக மத்திய - மாநில அரசுகள் இடையே மோதல் என்பது வலுத்துள்ளது.
இதற்கிடையே தான் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த கலியுக கண்ணன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் டுடோரியல் கல்லூரி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் ஆசிரியராக செயல்பட்டு வரும் நிலையில் அவர் திடீரென்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தான் கலியுக கண்ணன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதாவது தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு உள்ள நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் 10 மொழிகளை கற்று மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதனை ஒப்பிட்டு அவர் கருத்து
பதிவிட்டதாகவும், அதனை தொடர்ந்து கலியுக கண்ணன் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இது சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியது. இதனை வைத்து பலரும் தமிழக போலீசுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டனர். அதுமட்டுமின்றி கருத்து சுதந்திரம் தமிழக அரசால் பறிக்கப்படுவதாக விமர்சனம் செய்ய தொடங்கினர். இதற்கிடையே தான் தற்போது தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கலியுக கண்ணன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்படவில்லை. மாறாக சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டதால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, ‛‛கலியுக கண்ணன் எனும் எக்ஸ் தள கணக்கில் இயங்கி வரும் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த இந்த நபர் தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பு பதிவுகளை பதிவிட்டதாலும், பெண்களுக்கு எதிராக இழிவான பதிவுகளை பதிவிட்டதாலே வழக்குப்பதிவாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் கைது செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கலியுக கண்ணன், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட டூடோரியல் கல்லூரி ஆசிரியர் கலியுக கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்படுகிறது.
முடிவு
சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட வழக்கில் தான் கலியுக கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications