880 டன்.. தங்கத்தை கொத்து கொத்தாக வாங்கி குவிக்கும் இந்தியா.. ரிசர்வ் வங்கி பாய்ச்சல்.. ஏன்?
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்த தொடங்கி உள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும்.
இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35% அதிகரித்து, FY20 இல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.
உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது.
RBI ஏன் அதிக தங்கத்தை வாங்குகிறது?:
சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக உள்ளது, மேலும் தங்கம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை நம்ப முடியாது. அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.
ஏனென்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும்.இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிரம்ப் வந்த பின் பொருளாதார சரிவு நிலவும் இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தங்கம் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
பற்றாக்குறை போகும்
அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியா 76.37 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது அதே சமயம் $41.62 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்தது, இதன் விளைவாக $34.75 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது.
அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக Trade diversification எனப்படும் வர்த்தகப் பல்வகைமை முறையை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்ய உள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இவற்றில் கணிசமான அளவை அமெரிக்காவிலிருந்து இந்தியா எளிதாக பெற முடியும். இதன் மூலம் தங்கம், வெள்ளியின் கையிருப்பு இந்தியாவில் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்
2024-பிப்ரவரி 2025) இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த இறக்குமதி 74 பில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ளது.
2023-24ல் இந்தியா $74.81 பில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் சுமார் 5 பில்லியன் டாலர்கள் இறக்குமதிகள் அமெரிக்காவிலிருந்து வந்தவை. இதை இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு உயர்த்த இந்தியா முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications