தங்கம் ரொம்ப முக்கியம்! சத்தமே இன்றி சம்பவம் செய்த ஆர்பிஐ! திரும்பி பார்த்த உலக நாடுகள்.. என்னாச்சு?
சென்னை: உலக தங்க கவுன்சில் (World Gold Council) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 1,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கி குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தங்கம் வாங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கி சத்தமின்றி சம்பவம் செய்துள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்கத்தை வாங்கும் ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகிறது. மார்ச் 2025 நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 879.58 டன்னாக உயர்ந்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும்.
தங்கத்தின் விலை உயர்வு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்முதல் காரணமாக, இந்தியாவின் நிகர வெளிநாட்டு சொத்துக்களில் தங்கத்தின் பங்கு தற்போது 12 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு 8.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது திரும்ப கொண்டு வந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தங்க இருப்புகள் குறித்த உலகளாவிய கவலைகளை இது பிரதிபலிக்கிறது. உலகளாவிய கையிருப்பில் அமெரிக்க டாலரின் பங்கு குறைந்து வருவதால், அமெரிக்க கருவூலங்களில் இந்தியா தனது முதலீட்டை சீராக வைத்துக்கொண்டு, தங்கத்தின் கையிருப்பையும் அதிகரித்து வருகிறது.
மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவிப்பது தொடரும் என்று உலக தங்க கவுன்சிலின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி தங்க இருப்பு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கணக்கெடுப்பில் பங்கேற்ற வங்கிகளில் 95 சதவீதம் வங்கிகள் அடுத்த 12 மாதங்களில் உலகளாவிய தங்க இருப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளன. அதே நேரத்தில் 43 சதவீதம் வங்கிகள் தங்களுடைய தங்க இருப்பை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன.
மேலும் பதிலளித்தவர்களில் 73 சதவீதம் பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய கையிருப்பில் டாலரின் பங்கு மிதமாகவோ அல்லது கணிசமாகவோ குறையும் என்று நம்புகின்றனர். யூரோ மற்றும் ரென்மின்பி போன்ற பிற நாணயங்களின் பங்கும், தங்கத்தின் பங்கும் அதிகரிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஐரோப்பிய மத்திய வங்கி இதுகுறித்து கூறுகையில், "மத்திய வங்கிகளின் உலகளாவிய தங்க கையிருப்பு தற்போது 36,000 டன்னாக உள்ளது. இது பிரெட்டன் வூட்ஸ் வரலாற்றில் 1965 ஆம் ஆண்டில் இருந்த 38,000 டன் என்ற வரலாற்று உச்சத்தை நெருங்குகிறது. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், சந்தை விலையில் உலகளாவிய வெளிநாட்டு இருப்புகளில் தங்கத்தின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. இது யூரோவின் பங்கை (16 சதவீதம்) விட அதிகமாகும்" என்று கூறியுள்ளது.
ஏன் தங்கம் மீது ஆர்வம்?
மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஏன் இவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்ற கேள்விக்கு, ஐரோப்பிய மத்திய வங்கி நடத்திய ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு வங்கிகள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றன. ஐந்தில் இரண்டு பங்கு வங்கிகள் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு எதிராக தங்கத்தை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றன என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தன்னிச்சையான வரிக் கொள்கைகள், அதிகப்படியான பற்றாக்குறை மற்றும் நிலையற்ற முடிவெடுக்கும் திறன் போன்ற காரணங்களால் பல நாடுகள் டாலரில் விலகிச் செல்கின்றன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் டாலரை கைவிட்டு தங்கத்தை நோக்கி நகர்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகிறது. மார்ச் 31, 2024 நிலவரப்படி 822.1 மெட்ரிக் டன்னாக இருந்த ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு, மார்ச் 31, 2025 அன்று 879.58 டன்னாக அதிகரித்துள்ளது. ஜூன் 2020 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 218.17 டன்கள் அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். இதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 103.66 டன்கள் மட்டுமே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் ரிசர்வ் வங்கிக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, மார்ச் 2024 இறுதியில் 8.3 சதவீதமாக இருந்த தங்கத்தின் பங்கு, மார்ச் 2025 இறுதியில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications