சர்க்கரை நோய் பாதிப்பு.. ரொம்பவே மோசமான இடத்தில் தமிழ்நாடு.. அதிர்ச்சி கொடுத்த ஆய்வறிக்கை
நாம் உண்ணும் உணவில் இருக்கும் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற சர்க்கரைகளை உடலால் செரிக்க முடியாத தன்மையே சர்க்கரை நோய் எனப்படுகிறது.
சென்னை: இந்தியாவிலேயே சர்க்கரை நோய்ப் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த நிலை நீடிக்கும்பட்சத்தில், இந்தியாவின் சர்க்கரை நோய் தலைநகரமாக தமிழ்நாடு விரைவில் மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், தற்போதைய சூழலில் அதிக அளவிலான இளம் வயதினரும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சுறுத்தும் சர்க்கரை
வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், போதிய அளவுக்குத் தூக்கமின்மை, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பரம்பரை பரம்பரையாகவும் சர்க்கரை நோய் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வருவதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதனிடையே, இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது முற்றிலும் குறைந்துவிட்டது என்பதால் 25 வயது இளைஞர்களுக்கே சர்க்கரை நோய் வருவதைப் பார்க்க முடிகிறது.

தமிழ்நாடு இரண்டாவது இடம்
இந்நிலையில்தான், இந்தியா முழுவதும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் சர்க்கரை நோய்ப் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் இந்தியாவிலேயே சர்க்கரை நோய்ப் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாகக் கேரளா உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளாவில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 22.3 சதவீதம் பேருக்குச் சர்க்கரை நோய் உள்ளது.

வட மாநிலங்களில் பாதிப்பு குறைவு
ஆந்திராவில் 21.1 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தென் மாநிலங்களை ஒப்பிடும் போது வட மாநிலங்களில் சர்க்கரை பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே சர்க்கரை நோய்ப் பாதிப்பு உள்ளது. தென் மாநில மக்களின் உணவுப்பழக்கமும், அதுசார்ந்த மரபணு மாற்றமுமே இங்குச் சர்க்கரை நோய்ப் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிற

மருத்துவர்கள் அறிவுரை
நாம் உண்ணும் உணவில் இருக்கும் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற சர்க்கரைகளை உடலால் செரிக்க முடியாத தன்மையே சர்க்கரை நோய் எனப்படுகிறது. பொதுவாக, ஒருவருக்குச் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவரது உடல் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் பாதிப்படையத் தொடங்கும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. முறையான உடற்பயிற்சி, நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே சர்க்கரை நோய் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். சர்க்கரை நோய் வந்தவர்கள் சரியாக மருந்துகளை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது, மருத்துவர்கள் கூறியபடி உணவுகளை உண்பது ஆகியவற்றை பின்பற்றினால் சர்க்கரை அளவு கூடாமல் பார்த்துக்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications