முருங்கை பிசின்.. முத்து முத்தான நன்மை தரும் ஜெல்லி.. ஆரோக்கியம் காக்கும் முருங்கையின் பிசின் பவுடர்
சென்னை: அபாரமான சத்துக்களை கொண்ட முருங்கை மரத்தின் பிசினை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா? இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் இந்த பிசினை எப்படி சாப்பிட வேண்டும்?இந்த முருங்கை பிசின் குறித்து ஆய்வுகள் என்ன சொல்கின்றன? சுருக்கமாக பார்ப்போம்.
முருங்கை மரத்திலிருந்து கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாகிவிட்டால், பசை போல மரத்திலிருந்து வெளித்தள்ளும் பொருளைதான் பிசின் என்கிறோம். கழிவு போல வெளியே தள்ளிவிடுவதால், இதனை குறைத்து மதிப்பிட முடியாது.. தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் இந்த பிசினில் உள்ளதாம்.

முருங்கை பிசின்: முருங்கை மரத்திலிருந்து வெளிப்படும், பிசினில் வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வேதிப்பொருள்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் நிறைந்திருக்கின்றன.
பார்ப்பதற்கு கெட்டித்தன்மையுடன் சிவப்பாக காணப்படும்.. முருங்கை மரத்திலேயே இந்த பிசின் காணப்படும் அல்லது நாட்டுமருந்து கடைகளிலும் தாராளமாக இந்த பிசின் கிடைக்கிறது. இதை நன்றாக கழுவி, சுத்தமான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் ஜெல்லி பதத்துக்கு பிசின் வந்துவிடும். இந்த நீரை இளஞ்சூடான பால் கலந்து ஆண்கள் குடிக்கலாம். இதனால், நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை கோளாறுகள் நீங்கும்.
கெட்டித்தன்மை: அல்லது கெட்டியான பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து தூள் செய்து கொண்டு, சாப்பிட்டு வரலாம். அல்லது முருங்கை பிசின் பவுடரை, இரவில் ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்தெடுத்து, அதில், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காலையில் பிசின் தண்ணீரை வடி கட்டி குடிக்கலாம்.. அல்லது சூடான சாதத்தில் கூட ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பிசினை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். கால்சியம் அதிகமாக உள்ளதால், முழங்கால் வலி, மூட்டு வலிகள் நீங்கும்.. மாதவிடாய் தொந்தரவு உள்ள பெண்கள், அனீமியா பாதிப்பு உள்ளவர்கள், பிரசவத்திற்கு பின்னர், பலம் குறைந்தவர்களுக்கு இந்த முருங்கையின் பிசின் சிறந்த மருந்தாகும்.
ஆய்வுகள்: சமீபத்தில், இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசி அண்ட் டெக்னாலஜி, கட்டாக் மற்றும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.. அதில், முருங்கை பிசினை உடலின் வெளிப்புறமாக பயன்படுத்தப்படும்போது, காயம் அல்லது புண், சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஏற்படும் தொற்றுக்கள் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, ஆக்ஸிஜனேற்றம், திசு பாதுகாப்பு, வலி நிவாரணி உள்ளிட்ட பல உயிரியல் செயல்பாடுகளை இந்த பிசின் கொண்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த பிசினில் பாலிபினால்கள், ஃபீனாலிக் அமிலங்கள், பிளாவனாய்டுகள், குளுக்கோசினோலேட்டுகள், ஆல்கலாய்டுகள் அதிகமாக உள்ளதால், காயங்களை விரைந்து ஆற்றும் தன்மை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. எனவே, முருங்கை பிசின் கலந்த தயாரிப்புகளை உடலின் மேற்பூச்சாக தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
தலைவலி, காதுவலி: பிசின் நீரை, காலையிலேயே குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.. கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பிசின் பொடியை தலையில் பற்று போல போடலாம். ரத்தசோகையை விரட்டக்கூடியது இந்த பிசின்.. காது வலி அதிகமாக இருந்தால், காயவைக்காத, பச்சை பிசினை காதில் ஒரு சொட்டு விட்டாலே நிவாரணம் கிடைக்குமாம்,.
தலையில் இளநரை உள்ளவர்களும், அதிகமாக தலைமுடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்களும். முருங்கை பிசினை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.. இந்த பிசினில், முருங்கையின் வேர்களையும் சேர்த்து லேகியங்கள் தயாராகின்றன. இப்படி ஏராளமான நன்மைகள் இருந்தாலும், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்றே முருங்கை பிசினை பயன்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications