பெங்களூரில் வோல்வோ பஸ் ஸ்டிரைக்: திண்டாடிய சாப்ட்வேர் ஊழியர்கள்
பெங்களூர்: பெங்களூரில் வோல்வோ பேருந்து வேலைநிறுத்தத்தால் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர்.
பெங்களூரில் ஏராளமான வோல்வோ ஏசி பேருந்துகள் ஓடுகின்றன. இந்நிலையில் சுபாஷ்நகரில் உள்ள ஏழாவது டிப்போவில் நேற்று வோல்வோ பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் இந்த டிப்போவில் இருந்து ஒயிட்பீல்டுக்கு கிளம்பும் 23 பேருந்துகள் ஓடவில்லை. ஒயிட்பீல்டில் தான் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவர்டைம் ஊதியம் குறித்து 46 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சுமார் 4 மணிநேரம் போராட்டம் நடத்தினர். இதனால் டோம்லூர், மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டில் உள்ள அலுவலகங்களுக்கு செல்வோர் வோல்வோக்கள் இன்றி அவதிப்பட்டனர்.
மாரத்தஹள்ளியில் தங்கியிருக்கும் சௌவிக் சமத்தார் மெஜஸ்டிக் அருகே இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். காலை 9 மணிக்கு அலுவலகத்தை அடைய அவர் 7 மணிக்கு வோல்வோ பேருந்தில் ஏறி 8.30 மணிக்கு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை அடைவார். ஆனால் நேற்று காலை அவர் வழக்கமாக செல்லும் 335இ வோல்வோ பேருந்து வரவில்லை.
30 நிமிடங்கள் காத்திருந்தும் பேருந்து வரவில்லை. வழக்கமாக 5 நிமிடத்திற்கு ஒரு வோல்வோ பேருந்து வரும். ஆனால் நேற்று பேருந்து வராததால் அவர் மெஜஸ்டிக் செல்லும் வேறு இருவருடன் சேர்ந்து ஆட்டோவில் சென்றார். இது போன்று பலரும் அவதிப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து நடத்துநர் சுனிதா கூறுகையில்,
என்னைப் போன்று பல பெண் நடத்துநர்கள் கூடுதல் வேலைப் பளுவால் அவதிப்படுகின்றனர். அதிலும் சரியான ஊதியம் வேறு கிடைப்பதில்லை. அதிகாலையில் வேலைக்கு வந்துவிட்டு இரவு நேரத்தில் செல்லும் எங்களுக்கு டிப்போவில் கேன்டீன் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றார்.
டிப்போ மேனேஜர் அமரேஷ் கூறுகையில்,
வோல்வோ ஓட்டுநர்கள் நாள் ஒன்றுக்கு 8 ட்ரிப் அடிக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெறும் 6 ட்ரிப் தான் அடிக்கிறார்கள். அவர்கள் 8 ட்ரிப் முடித்தால் மூன்றரை மணிநேரம் ஓவர்டைம் பார்த்த அளவுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.
பெங்களூரில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில் மழையால் கூடுதலாக நெரிசல் ஏற்படுவதால் தங்களால் தினசரி கோட்டாக்களை அடைய முடியவில்லை என்று ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.