ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை
சென்னை: ஆசிரியர் பணிக்கான தேர்வில் கண்பார்வையற்றவர்கள் பங்கேற்கச் செய்வதற்கான வழிகாட்டு விதிகளை வகுக்காமல், தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கண்பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்க கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019ல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கண்பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுசம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 9ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தேர்வில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் எந்த வழிகாட்டு விதிகளையும் அறிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்
இதையடுத்து, ஆசிரியர் தேர்வில் கண்பார்வையற்றவர்கள் பங்கேற்கும் வகையில் உரிய வழிகாட்டு விதிகளை வகுக்காமல், தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.