சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் பலருக்கும் கிடைத்த மத்திய அரசு வேலை.. சூப்பர் சம்பவம்
சென்னை: தேச கட்டுமானத்தில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் விதமாக வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடைபெற்றன. மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 339 இளைஞர்கள் பணி நியமன ஆணைகள் பெற்றனர்.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தேச கட்டுமானத்தில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் விதமாக வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் 17-வது வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. நாடு முழுவதும் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடைபெற்றன.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு 112 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் பங்கேற்று 51 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசுகையில், 'வேலைவாய்ப்பு திருவிழா என்பது இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்யவும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் கனவுகளை நனவாக்குவதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.
3 ஆயிரத்திற்கும் அதிகமான சுயபயிற்சிக்கான வாய்ப்புகளை கொண்டுள்ள 'கர்மயோகி பிராரம்ப்' என்ற இணையவழி சேவையை பணிநியமனம் பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். இதில், கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் 116 இளைஞர்களுக்கு சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மதுரையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் 60 இளைஞர்களுக்கு தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
வேலைவாய்ப்பு திருவிழாக்களில் மத்திய அரசின் அஞ்சல்துறை, நிதி சேவைகள் துறை, ரயில்வே துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் போன்றவற்றில் பணிபுரிவதற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications