Pirandai Thuvaiyal: வயிற்று பூச்சியை கட்டுப்படுத்தும் மூலிகை.. பிரண்டை துவையல் செய்வது எப்படி?
சென்னை: குழந்தைகள் சரியாக சாப்பிடவே மாட்டேன் என்கிறார்கள் என்பது தாய்மார்களின் பெரிய கவலையாகும். பசியை தூண்டுவதற்கும் வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் ஏதேதோ வைத்தியங்களை பார்ப்போம்.
குழந்தைக்கு சாதம் ஊட்டும் போது சுத்தி போடுவார்கள். அப்போது சாப்பிட்டு முடித்த அந்த ஒரு உருண்டை சாதத்தில் சுத்தி போடுவார்கள். அதை கூட நம் தாய்மார்கள் அரை உருண்டையாக்கி மீதமுள்ள அரை உருண்டையில் சுத்தி போடுகிறார்கள்.

சற்று வளர்ந்த குழந்தைகளிடம் ஏன் சாப்பிடவில்லை என கேட்டால் பசிக்கவில்லை என்பார்கள். இதற்காக தாய்மார்கள் பசியை தூண்டவும், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவும் மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் இயற்கையான முறையில் சில விஷயங்களை செய்தால் பைசா செலவில்லாமல் குழந்தைகளுக்கு பசியை தூண்டி விடலாம்.
இதற்காக நாம் பிரண்டை என்ற மூலிகையை வைத்து ஒரு உணவை செய்ய போகிறோம். இந்த பிரண்டையில் பொதுவாக துவையல் செய்வார்கள். இல்லாவிட்டால் பொடி செய்வார்கள். இந்த மூலிகை கைகளுக்கு அரிக்கும் தன்மையை ஏற்படுத்தும் என்பதால் பலர் இதை தவிர்க்கிறார்கள்.
ஆனால் இது வளரும் குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உகந்தது. பிரண்டை துவையல் செய்ய தேவையான பொருட்களை பார்க்கலாம். அதற்கு முன்பு பிரண்டையை எப்படி சுத்தப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம். முதலில் இளசாக இருக்கும் பிரண்டையை எடுத்துக் கொள்வது நல்லது. அதை கூட கைகளில் நல்லெண்ணெய் தடவி கொண்டு அதன் கிளைகளை ஒடிக்க வேண்டும். பின்னர் பீர்க்கங்காயில் பக்கவாட்டில் உள்ள கூர்மையான முனையை சீவுவது போல் இதில் உள்ள முனைகளையும் சீவ வேண்டும்.
தேவையான பொருட்கள்
- பிரண்டை சிறிது
- உளுத்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
- சிகப்பு மிளகாய்-5 அல்லது 6 காரத்திற்கேற்ப
- புளி- சிறிதளவு
- உப்பு -சிறிதளவு
- எண்ணெய்-தேவைக்கேற்ப
- கடுகு- கால் ஸ்பூன்
செய்முறை: முதலில் பிரண்டையை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதை நிறைய தாராளமாக எண்ணெய்விட்டு நிறம்மாறும் வரை வதக்க வேண்டும். அப்போதுதான் அதன் அரிப்பு தன்மை நீங்கும். அதை தனி பிளேட்டில் மாற்றி கொள்ளவும். மீதம் இருக்கும் எண்ணெய்யில் (இல்லாவிட்டால் கொஞ்சம் ஊற்றி கொள்ளுங்கள்) உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதன் பிறகு மிளகாய் போட்டு வதக்கவும், பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு புளியை சேர்க்க வேண்டும். அதில் தேவைப்பட்டால் 3 பல் உரித்த பூண்டுகளை பிரண்டை வதக்கியதும் வதக்கிக் கொள்ளலாம்.
பின்னர் இவற்றை ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அதில் கடுகை தாளித்து கொட்டிவிடவும். இப்போது பிரண்டை துவையல் தயார்! இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்கும்போது ஆற வைத்த சாதத்தில் சிறிது நெய் விட்டு துவையலை தேவையான அளவு போட்டு பிசைந்து கொடுக்கவும். இவற்றுடன் நல்ல புரதச்சத்து கொண்ட காய்கறிகளையும் கொடுத்தனுப்புங்கள். பிரண்டை பசியை தூண்டும். இந்த துவையலை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள கூட கொடுத்தனுப்பலாம்.












Click it and Unblock the Notifications