குழந்தை நீதி கதைகள்: பயமா எனக்கா போடா- வாயால் சிக்கிய வாண்டு மீன்கள்
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க.ஸ்கூல் நல்ல போகுதா?. சரி இந்த வாரம் நாம எப்படி பயப்படணும் னு பாக்கபோறோம். நம்ம வாழ்க்கைல எதுக்கும் பயப்பட கூடாதுனு சொல்லுவாங்க. நா என்ன புதுசா சொல்றேன்னு பாக்கறீங்களா. கதையை படிச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவுல ஒரு குளம் இருந்துச்சு. மீன்கள், நண்டுகள், தவளைகள் என்று எல்லா வகையான நீர் வாழ் இனங்களும் அங்கு மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தன. அதுல சமணன், சத்யன் என்ற இரு அழகிய மீன்களும் இருந்தன. அந்தக் குளத்திலுள்ள மற்ற மீன்களைவிட பெரியவை. தம்முடைய அழகிய தோற்றம், அறிவாற்றல் ஆகியவற்றைப் பற்றி அவை இரண்டிற்கும் அதிகப் பெருமை இருந்துச்சு.
அதே குளத்தில் குஜன் என்ற தவளை தன் மனைவியோடு வசித்து வந்தது. அங்கு மீன்களுக்கும் தவளைகளுக்குமிடையே நல்ல நட்பு இருந்தன. எந்தத் தகராறும் இல்லாமல் அவை நல்லபடியாக வாழ்ந்தன.
ஒருநாள், காட்டுக்குள்ள இருந்த ஆத்துல மீன் பிடித்து விட்டு இரண்டு மீனவர்கள் வந்து கொண்டிருந்த போது அந்தக் குளத்த பாத்தாங்க. அப்போ மாலைப்பொழுது முடியுர நேரம். வழக்கம் போல எல்லா மீன்களும் தவளைகளும் விளையாடிக் கொண்டிருந்தன. சமணன், சத்யன், குஜன் எல்லாரும் மற்றவர்களோடு விளையாட்டில் கலந்து கொண்டன. குளத்தை விட்டு மேலே எழும்பிக் குதித்து ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அழகிய காட்சியைக் கண்ட மீனவர் இருவரும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

அங்கேயே நின்று அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தனர். "அங்க பாரு எவ்வளவு அழகாக இருக்குல்ல எல்லாம்!" என்றான் ஒருவன். "ஆமா. அதுல எத்தனை வகைகள் இருக்குது, பாத்தியா?" என்றான் மற்றவன்.
"இந்தக் குளம் அதிக ஆழமில்லாதது போல இருக்குதே" என்று கேட்ட முதலில் பேசிய மீனவன் "நாம சில மீன்களைப் பிடிக்கலாமா ?" என்று கேட்டான். "இப்போ அதிக நேரமாகியிருச்சு. அது தவிர மேல சுமையைத் தூக்கிக் கொண்டு நாம அதிகத் தொலைவு போக வேண்டும். அதனால நாளைக்கு இங்கு வரலாம்" என்று யோசனை கூறினான் அடுத்தவன். இருவரும் அந்த இடத்தை விட்டு போனாங்க.
குஜன், குளத்திலிருப்பவைகளைப் பாத்து, "அந்த மீனவர்கள் பேசியது உங்க காதுல விழுந்ததா? நாம் இந்தக் குளத்தை விட்டு வேறு பாதுகாப்பான இடத்திற்கு போய்டலாம்"னு சொல்லுச்சு. "யாரோ இரண்டு மீனவர்கள் நாளைக்கு இங்க வந்து நம்மைப் பிடிக்கப் போறதா பேசிட்டு இருந்தத வெச்சு, நம்முடைய இந்த இடத்தை விட்டு நாம் ஓட முடியுமா? அவங்க நாளைக்கு இங்கு வராமலே கூட இருக்கலாம் இல்லையா?"னு சொல்லிச்சு சமணன், தொடர்ந்து பேசியது, "அவங்க நம்மைப் பிடிப்பதற்காக வந்தாலும் தப்பித்துக் கொள்ள என்கிட்ட ஆயிரம் வழிகள் இருக்குது !"
உன்னுடைய ஆயிரம் வழிகளும் தோற்றாலும் தப்பித்துக் கொள்ள மேலும் நூறு வழிகள் எனக்குத் தெரியுமே !" என்றது சத்யன். "இரண்டு மீனவர்கள் நம்முடைய இடத்தைவிட்டு நம்மைத் துரத்த நாம அனுமதிக்கக் கூடாது." என்று மேலும் கூறியது. அந்தக் குளத்திலுள்ள மற்றவை எல்லாம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டன. "நல்லது. எனக்கு ஓர் உபாயம் மட்டுமே தெரியும். ஆபத்து வருவதற்கு முன்னால் அந்த இடத்தை விட்டு போக வேண்டும்" னு சொன்ன குஜன் தன்னோட மனைவியோடு அந்தக் குளத்தை விட்டுப் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றது. அவர்கள் போவதைக் கண்டு எல்லா மீன்களும் தவளைகளும் நண்டுகளும் ஏளனமாகச் சிரித்தன. மறுநாள் அங்கு வந்த மீனவர்கள் பெரிய வலையைக் குளத்தில் வீசினார்கள்.
"ஓ கடிப்பதற்கு முடியாமல் இந்த வலை ரொம்ப தடியா இருக்குதே" என்று சோகத்தோடு சமணன் கத்தியது." என்னாலையும் இதிலிருந்து தப்ப முடியலையே! வலையை விட்டு வெளியில் வந்தால் தானே என்னால் எதையாவது செய்ய முடியும் ? " என்று சத்யன் வருந்தியது. குஜனின் அறிவுரையை நாம கேட்டிருக்க வேண்டும் என்று துயரத்தோடு கூறியது. மற்றொரு மீன். மீன்கள், நண்டுகள், தவளைகள் ஆகியவற்றைப் பிடித்த மீனவர்கள் அவற்றைப் பெரிய கூடையில் போட்டு எடுத்துச் சென்றனர். ஒரு பெரிய கல்லுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த குஜன், அருகிலிருந்த தன் மனைவியிடம், "சரியான நேரத்தில் நாம அந்த முடிவை எடுத்திருக்க விட்டால் மற்றவர்களோடு நாமும் இந்நேரம் அந்தக் கூடைக்குள் இருந்திருப்போம்," என கூறியது.
குட்டிஸ் கதை எப்படி இருந்து இருந்துச்சு, நல்லா இருந்துச்சா. தைரியமா இருக்கனும் ஆனா அசட்டு தைரியமா இருக்கறது எப்பவும் ஆபத்துதான். பயப்படுற விஷயங்களுக்கு பயப்பட்டு தான் ஆகணும். அத தான் ஆபத்து வரதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோனு பெரியவங்க சொல்லுவாங்க. நீங்களும் அந்த மாதிரி நடந்துக்கோங்க. வருமுன் காப்பதே நல்லது.












Click it and Unblock the Notifications