குழந்தை நீதி கதைகள்: போலி தாத்தாவும் கேலி வேலனும்- ஏமாற்றாதே ஏமாறாதே!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், ஸ்கூல் ல எல்லாரும் லஞ்ச் பிரேக் விட்டா ஜாலியா இருக்கும் ல. நண்பர்கள் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவோம் இல்லையா. நம்ம டீச்சர் சொல்லிருப்பாங்க, மாணவசெல்வங்களே எல்லாரும் ஷேர் பண்ணி சாப்பிட்டனும் னு. சில குட்டீஸ் என்ன பண்ணுவாங்க, வெரைட்டியா கொண்டு வந்த தனியா போய் சாப்பிடுவாங்க. கேட்டா எதுவும் இல்லனு ஏமாத்துவாங்க. நான் ஒரு கதை சொல்ற. அந்த பிரண்ட்ஸ் கிட்ட நான் சொல்ற கதைய ஷேர் பண்ணுங்க.
ஒரு ஊரில் பணக்கார தாத்தா ஒருவர் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வீட்டிற்கு அருகில் ஒரு தோட்டம் வைத்திருந்தார். அதை பராமரிக்க வேலன் என்பவனை நியமித்தார். நிறைய பணம் வைத்திருந்தாலும் தோட்டக்கார வேலைக்கு குறைவான ஊதியமே கொடுத்தார். அவர் தரும் பணம் அன்றாட உணவுக்கே சரியாக இருந்தது. சிறிது காலம் கஷ்டப்பட்டான்.
தாத்தாவோ ஒரு பெரிய உணவு விரும்பி. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எதையாவது சாப்பிட்டு கொண்டு இருப்பார்.. இதை கவனித்த வேலன். தாத்தாவிடம் சாதுரியமாக பேசி சிறிதளவு கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொள்வான். தாத்தாவும் மனமில்லாமல் கொடுப்பார்.

வழக்கம்போல், ஒருநாள் சந்தைக்கு சென்று தாத்தா தனக்கு பிடித்த கட்டி தயிர் வாங்கி வந்தார். இம்முறை இந்த தயிரில் சிறிதளவு கூட வேலனுக்கு தரக்கூடாது முழுவதையும் தானே சாப்பிட வேண்டும். அவனை ஏமாற்றி விடலாம் என்று எண்ணினார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வேலன் அவரை பார்த்து விட்டான். "ஐயா டம்ளரில் என்ன இருக்கிறது" என கேட்டான். உடனே அவர், சுண்ணாம்பு வாங்கி வந்திருக்கிறேன். இதை சாப்பிட்டால் வயிறு எறிந்து வலி வந்து உடனே உயிர் போய்விடும். எக்காரணம் கொண்டும் இதை தொடாதே". என்றார். மேலும், "போய் இன்று முழுவதும் தோட்டத்தை உழு" என்று அனுப்பப் பார்த்தார். கெட்டிக்கார வேலனுக்கு தாத்தா ஏமாற்றுகிறார் என புரிந்து விட்டது. அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என மனதில் கொண்டு, டம்ளரை எட்டிப் பார்த்தான்.. அதன் வாசனை வைத்து தயிர் தான் என்பதை உறுதிப்படுத்தினான். தாத்தா அவனை பார்த்து, "டேய் வேலா வேலையை பாரடா" என்றார். அவன் தாத்தாவிடம், "ஐயா நான் வெற்றிலை போட வேண்டும். டம்ளரில் இருக்கும் சுண்ணாம்பு எடுத்துக் கொடுங்க" என கேட்டான். அதற்கு தாத்தா, "முதலில் சொன்ன வேலையை முடி. பிறகு பார்க்கலாம்" என்றார். "அதற்குள் நான் முடித்து விடுவேன்" என மனதில் எண்ணி சிரித்தபடி.
மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்ற வேலன், சிறிது நேரத்தில் திரும்ப வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்த தாத்தா "அதற்குள் நான் சொன்ன வேலையை முடித்து விட்டாயா" எனக் கேட்டார் ஆச்சரியமாக, அதற்கு வேலன் , "ஐயா எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஒரு மாட்டை கட்டினால் மற்றொரு மாடு அறுந்து ஓடுகிறது. இதில் நான் எப்படி உழுவது. மேலும், ஏர் பழுதடைந்து விட்டது. அதை சரிசெய்ய பணம் வேண்டும்" என்றான்.
கோபப்பட்ட பணக்கார தாத்தா, வேலையை செய்ய சொன்னால் விளையாட்டு காட்டுகிறாயா?" என முதுகில் ஓங்கி அறைந்தார். வேலன் தாத்தாவை பார்த்து, "ஐயா இதுவரை யாரும் என்னை அடித்ததேயில்லை. நீங்கள் என்னை அடித்து விட்டீர்கள். இனி ஒருபொழுதும் உயிரோடு வாழ மாட்டேன். அந்த சுண்ணாம்பை குடித்து உயிர் விடுகிறேன்". என கூறி டம்ளரை நோக்கி ஓடினான். தாத்தா, "டேய் அதை குடிக்காதே" என துரத்திக் கொண்டு பின்னால் சென்றார். அதற்குள் டம்ளரில் இருந்த கட்டி தயிர் முழுவதையும் வேலன் குடித்து விட்டான்.
தாத்தாவை பார்த்து, "கட்டி தயிர் மிகவும் ருசியான உள்ளது" என கூறி வேலை செய்ய கிளம்பினான்.
வேலனை ஏமாற்ற போய் முடிவில் தானே ஏமாந்து விட்டோமே என்று தாத்தா வருந்தினார். அன்றிலிருந்து, எது வாங்கினாலும் தவறாமல் வேலனுக்கு பங்கு கிடைத்தது.
குட்டீஸ், எல்லாரும் இனி ஷேர் பண்ணி சாப்பிடுவோம். அதே மாதிரி, யாரையும் ஏமாற்ற எண்ண கூடாது.












Click it and Unblock the Notifications