Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதி ஆதாரங்களை எப்படி பெருக்கலாம்? விவரிக்கும் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதிநிலைமை கவலை தருவதாக உள்ளது என்பதுடன் நிதி ஆதாரங்களை எப்படி எல்லாம் பெருக்கலாம் என்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளதாவது:

தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது என வெள்ளை அறிக்கை சொல்கிறது...

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது.

ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து இந்த அறிக்கை என்று அமைச்சர் வெளியிட்டார்.

இதற்கு முன்னால் 2001 இல் அதிமுக வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.

* கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது.
* 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.
* இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை.
* வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
* தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாயாக உள்ளது.
* 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 கோடி; 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.
* அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.
* அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
* தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.
* தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது.
* தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது

KS Radhakrishnan shares views on White Paper on Finances of TN Govt

கடன் சுமை அதிகரித்து வந்த பாதை

1999-2000 - 18,989 கோடி
2000-2001 - 28,685 கோடி
2001-2002 - 34,540 கோடி
2005-2006 - 50,625 கோடி
2011-2012 - 1,03,999 கோடி
2015-2016 - 2,11,483 கோடி
2017-2018 - 3,14,366 கோடி
2020-2021 - 4,56,660 கோடி
2021 - 4,85,502 கோடி.

தமிழகத்தின் 2020-21 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது.

2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது.
கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.

மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின் வாரியத்தை விட பீகார் மின் வாரியம் நல்ல நிலையில் உள்ளது.

இனி,தமிழகப் பொருளாதாரம் மேம்பட என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் இந்த ஆட்சியின் முதல் ஆளுநர் உரையில்; ஆட்சிக்கு ஆலோசனை வழங்கிட எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், அரவிந்த்சுப்ரமணியன், ரியர் ஜீன் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னெடுப்பாகும்.

கடந்த 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை,தாராளமயமாக்கல் கொள்கை துவங்கிய கட்டத்தில்மத்திய அரசுக்கு பொருளாதார அறிஞர்களுடைய ஆலோசனை தேவைப்பட்டது என்ற நிலையில்தான் அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சர் ஆக்க வேண்டிய இடத்தில் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்க மத்திய அரசில் இடம்பெறச் செய்தார் என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பதிவு செய்துள்ளார். பிற்காலத்தில் மாநில அரசுகளும் இம்மாதிரி ஆலோசனைக் குழுக்களை அமைத்தன.

தமிழகத்தில் கூட, 1996 ஆட்சி ஏற்பட்டவுடன் தலைவர் கலைஞர் வல்லுநர் குழுவின் ஆலோசனையின்பேரில் ஒவ்வொருத் துறை முன்னேற்றத்திற்கும் அதன் அறிக்கை பெற்று, அதைத் தனித்தனியாக துறைவாரியாக ஆங்கில அறிக்கைகளாக பத்து சிறுசிறு தொகுதிகளாக வெளிவந்ததெல்லாம் தனித்தனி நினைவுகள்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதேபோன்ற அறிக்கையை ஒன்றுபட்ட ஆந்திரத்திற்கு 2020 விஷன் வெளியிட்டதெல்லாம் உண்டு. ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டும், ராஜஸ்தான் மாநிலப்பொருளாதார மற்றும் சேவைகள் குறித்தான அறிக்கை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் மூலமாக வெளிவந்ததெல்லாம் உண்டு.

தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் தமிழகம் இருப்பதால், அதைத் தீர்க்கக்கூடிய அளவில் பொருளாதாரம், அறிவியல், சமூக இயல் என்பதை மையப்படுத்தி ஆலோசனைகளைப் பெற வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

நோய்த் தொற்று மற்றும் பொருளாதார ரீதியானநெருக்கடியான நிலையில், தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில், இன்றைக்கு திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது தமிழக அரசின் கடந்த ஆட்சிக் கால கடன்கள் ஏறத்தாழ 7,77,800கோடிகள் கடந்த 2020-21 நிதிநிலை அறிக்கையின்படிஇருப்பதாக தகவல். இந்தக் கடனோடு மாதாந்திரம், வருடாந்திரம் வட்டியும் கூடி கடன் சுமை நாளுக்கு நாள்கூடுகின்றது. இந்தக் கடன்கள் மாநில அரசு மற்றும்அதைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின்கடன்களை உள்ளடக்கியதாகும்.

தமிழக அரசின் கீழ் 51 வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்த நிறுவனங்களின் மொத்தக் கடன் 2018 மார்ச் வரை 168 லட்சம் கோடிகள் ஆகும். இதற்கு அடிப்படைகாரணம் நிறுவனத்தின் வருவாயை விட நடப்பு செலவுகள் அதிகமாக உள்ளது. அதாவது வருமானத்தைவிட செலவுகள் அதிகம் உள்ளது.

கவலை அளிக்கும் விதமாக தற்போது தமிழக நிதி நிலைதிருப்திகரமாக இல்லை.

நிலுவையில் மற்றும் செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ. 82,730 கோடி (மாநில அரசின் வட்டி ரூ. 53,600 கோடி மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களின் வட்டி ரூ. 29,130 கோடி) ஆகும். இன்றைய நிலவரப்படி நிதி நிலைமையைப் பார்த்தால் மாநிலத்தின் கடன் ரூ. 8,00,000 கோடியும் மற்றும் வட்டிக்கான செலவினங்கள் ரூ. 80,000 கோடியுமாக இருக்கும். சுமாராக மாநில குடிமக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ. 1,00,000 த்துக்கும் மேல் கடன் சுமை உள்ளதாகக் கருதலாம்.

2020-21-ம் ஆண்டின் வருவாய் ரூ. 3,13,700 கோடி (மாநில வரிகளில் இருந்து ரூ. 1,09,000 கோடி, மத்திய அரசு வரியில் இருந்து ரூ. 23,039 கோடி மற்றும் இதர வருமானங்கள் ரூ.1,87,000 கோடி) ஆகும். நிதி பற்றாக்குறை ரூ.59,000 கோடியாக இருந்தது.

இந்தக் கடன் சுமைகளைத் தீர்த்து நிலைமையைச்சமன்படுத்த வேண்டியது மட்டுமல்லாமல், கடந்த ஆட்சியில் நடந்த பிழைகளையும் திருத்த வேண்டிய நிலையில் தமிழக முதல்வர் இருக்கின்றார்.

தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூக நலத்துறை, புள்ளிவிவரத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி வகையிலும்தமிழகத்திற்கு வரவேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.

சில புள்ளி விவரங்கள் தமிழக அரசின் கடன் நிலவரம் 2021 முடிய 4.85 லட்சம் கோடியைத் தாண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால் கடன் குறித்து வெவ்வேறு இலக்காக புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

தமிழக அரசின் கடனும், தமிழக அரசின் பொது நிறுவனங்களின் கடனும் சேர்த்தால் 7 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று ஒரு கணக்கு. இதில் எந்தப் புள்ளிவிவரம் சரி என்று தெரியவில்லை.

இந்திய செலவுத் தணிக்கைக் குழுவின் (The Comptroller and Auditor General of India) சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகத்தின் 2020-21-ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1,74,256 கோடி ரூபாய்களாகவும், மொத்த செலவினங்கள் 2,66,561 கோடி ரூபாய்களாகவும், மொத்த நிதிப்பற்றாக்குறை 92,305கோடி ரூபாய்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரே நிதியாண்டில் ரூ13ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறையின் அறிக்கை கூறுகின்றது. அதுபோல மருத்துவ காப்பீடு திட்டத்திலும் 1000 கோடி பயனற்ற முறையில் சென்று விட்டதாகவும் 2019ஆண்டிலேயே 4 லட்சம் கோடி தமிழக அரசின் கடன் எட்டப்பட்டுள்ளதாகவும் தணிக்கை துறை தெரவித்துள்ளது

மேலும் தமிழ்நாடு அரசின் கடன் சுமை கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச்சு டன் முடிந்த காலத்திலேயே 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தத் தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

தமிழ்நாடு அரசின் மொத்த கடன் சுமை 2018-ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்த காலத்தில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 426.63 கோடியாக இருந்தது. இந்தக் கடன் அளவு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 599.33 கோடியாக இருந்தது. அதாவது, ஒரே நிதியாண்டில் ரூ.43 ஆயிரத்து 172.07கோடி கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.

இதில், பல்வேறு அம்சங்கள் மூலமாக உள்நாட்டிலேயே பெறப்பட்ட கடன்கள் 2018-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 634.40 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் 3 கோடியே 4 லட்சத்து 350.06 கோடியாகவும் இருந்தது என்று தணிக்கைத் துறை. தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு மாரச்சில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த கடன்சுமை, கொரோனா போன்ற காரணங்களால் நிகழ் நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சுமையின் அளவு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும்.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால்,ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பெறும் கடன் நிதி வட்டிவிகிதம் அதிகரித்துக் கொண்டு போகிறது. கடந்த கால ஆட்சிகளால் தமிழக அரசின் நிதி சந்தை மீது வைத்துள்ள நம்பிக்கையும் குறைந்துவிட்டது.இப்படியான நிலையில் இன்றைக்கு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிறுவனங்களை சீர்திருத்தி நடத்த வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது. நடப்பு நிதியாண்டில் தேவையில்லாத செலவுகளை ஒதுக்க வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு கடந்த காலங்களில் தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் வாங்கியதற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரம் கூடுதலான விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

எப்பொழுதெல்லாம் அரசு நிறுவனங்கள் விலை நிர்ணயத்தில் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் ஏற்படும் நட்டத்தை தமிழக அரசு தலையில்தான் ஏறிவிடுகிறது.

இதுபோன்ற தேவையில்லாத செலவினங்களை கவனிக்காமல், பொறுப்பில்லாமல் கடந்த காலத்தில் நடந்ததால் இப்படி நிதி சுமை ஏறிவிட்டது.

பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் அதைச்சார்ந்தவையும், தொழில்கள் அதைச் சார்ந்த கட்டுமானஅமைப்புகளும், போக்குவரத்து தொழில்நுட்பத்துறைபோன்ற துறைகளும் தான் கைகொடுக்கின்றன. இவற்றில் சேவை மற்றும் தொழில்துறைகள் தமிழகத்தில்முன்னிலையில் இருக்கின்றன.

விவசாயத்தில் மாநில வருவாய் (ஜிடிபி) மொத்தம் சுமார்8 விழுக்காடு ஆகும். ஆனால் இதைச் சார்ந்துள்ளமக்கள் தொகை அதிகம். பருத்தி, நிலக்கடலை, பயிர்உற்பத்திக்கு வசதியான நீர்வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.

அதுமட்டுமல்ல நெல், கரும்பு போன்ற பயிர்களோடுகாய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் எண்ணெய்வித்துக்களை தமிழகத்தில் அதிகமாகப் பயிரிடமுன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் பழ வகைகள்அதிகமாக விளைந்தாலும் அதை விற்பனைசெய்யக்கூடிய வகையில் குளிர்சாதனத்துடன் கூடியரயில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சிறு குறு தொழில்கள், சுய உதவி குழுக்கள், தொழில்முனைவோருக்கு நீண்ட கால கடன்தொகை குறைந்த வட்டியில் கொடுக்க வேண்டும். விவசாய இடுபொருட்களை மானிய விலையில் கொடுப்பதும், நீர் மேலாண்மையைச் சரிவர சீர்திருத்தி பயன்கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

விளைந்த பொருள்களை உழவர் சந்தை போன்று சந்தைப்படுத்தலும் உள்ளிட்ட பிரச்சனைகளை மாநில அரசு கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழக அரசின் மீது தற்போதுள்ள 2.85 லட்சம் கோடி கடன் இந்த நிதியாண்டில் 3.50 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம்.

மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல் பொருட்கள்தமிழகத்தில் அதிகம். அதை விற்பனைப் படுத்தக் கூடியவகையில் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இறக்குமதியை விட ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு தங்களது சொந்த வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. மறுபுறம் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி எடுக்கப்படவில்லை.

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஒய்வூதியங்கள், கடன் சேவை, மானியங்கள் போன்ற மூன்று செலவினங்களுக்கு மொத்த வருவாய்க்கும் அதிகமாக இடைவெளிகள் உள்ளன. புதுக்கடன் வாங்க நேர்கிறது. புதிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியவில்லை.

மாநிலஅரசின் நிதித்துறையின்; வலுவைப் பொறுத்தே எந்த ஒரு மாநிலமும் நல்ல முறையில் செயல்பட முடியும். நம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களாக உள்ளவை: 1. உள் மாநில வருவாய், 2. மத்திய அரசு வருவாய், 3. வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறும் கடன். இந்த மூன்று ஆதாரங்களையும் வலுப்படுத்த சீரான மாநில நிதி அமைச்சகம் வேண்டும்.

தகுதியானவர்களுக்கு மட்டுமே நலத்திட்டங்கள்...

இவை வரவேற்கத்தக்கவை என்றாலும், இலக்கின்றி அனைத்து மக்களுக்கும் இவற்றை வழங்குவது ஏற்புடையதன்று. இத்தகைய நலத்திட்டங்கள், சமூகத்தின் பலவீனமான மக்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கிய பொது விநியோக அமைப்பு (PDS) அல்லது அனைவருக்கும் மின்சாரம், பஸ் கட்டணம், சொத்து வரி போன்ற பொதுப் பயன்பாடுகளுக்கான கட்டணங்களையும், விலைகளையும் அதிகரிக்க அரசு தைரியமாக முடிவெடுக்க வேண்டிய தருணமிது.

கோவிட் 19-ல் பல பாடங்களைக் கற்றுக் கொண்டோம். அந்த வகையில் பொதுச் சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு என்பதை அடிப்படை வசதிகளாக எளிதில் எப்போதும் கிடைக்க வேண்டும்.

பொதுச் சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, விவசாயம் போன்றவற்றிற்கு தாராளமான நிதி உதவி கிடைத்து சாமானியனுக்கு அதன்பலன் சேரக் கூடிய அளவில் இந்த மூன்று துறைகளும் இயங்க வேண்டும்.

தமிழக அரசின் நிதி ஆதாரங்களை எப்படிப் பெருக்கலாம்? சில விடயங்கள்

1. குறைந்த விலையில் குடியிருப்புகள்: FSI 6 என 550 சதுர அடியில் தமிழகம் முழுவதும் 25,00,000 வீடுகளை தனியாருடன் இணைத்து கட்டித் தரலாம். இப்போது அதிகபட்சம் FSI 2 ஆக உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சொந்த வீடு வாங்கும் கனவை இது நிறைவேற்றும். அதில் மறு சுழற்சி நீர், சூரிய மின்சாரம் என நவீன முறையில் கட்டித் தரப்படும். விலை அவர்களின் வாங்கும் வசதிக்கு ஏற்றபடி இருக்கும்.

2. சேம நிதி: ஒரு கோடிப் பேர் சுயமாக தொழில் செய்கிறார்கள். உதாரணம் பெட்டிக் கடை வைத்து இருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள் சுயமாக கடை வைத்து இருப்பவர்கள், காய்கறி பழம்,உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் மற்றும் இவர்களிடம் பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாதா மாதம் பணம் செலுத்த வேண்டும் அரசும் அதற்கு இணையாகப் பணம் செலுத்தும். அந்தப் பணத்தில் அவர்கள் வீடு கட்ட முன் பணம் கிடைத்து விடும்.

3. வெளிநாட்டு வாழும் தமிழர்கள் நலன்: ஐம்பது லட்சம் தமிழர்கள் வெளி நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் சேம நிதிக் கணக்கு தொடங்கலாம். அது USD வெளிநாட்டு ரூபாயாக இருக்கும். அவர்கள் 75சதவீதம் செலுத்தினால் தமிழக அரசு 25 சதவீதம் செலுத்தும். அந்தப் பணத்தில் அவர்கள் தமிழகத்தில் வீடு மற்றும் சொத்து போன்ற வற்றில் மூலதனம் செய்யலாம். இப்போது M5 வரை வந்து விட்டது. ஓர் நூறு ரூபாய் ஒரு நாளைக்கு எத்தனை நபர்களிடம் கை மாறுகிறதோ அந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கும். இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட பணம் அதிக பட்சம் பதினைந்து லட்சம் கோடி ரூபாய்கள் தான். ஆனால் ஒரு நாளைக்கு டிரில்லியன் கணக்கில் பரிவர்த்தனைஆகிறது.

ஆங்கிலத்தில் 'லிக்யூடிட்டி' என்பார்கள். பணப்புழக்கம் அவசியம் இருக்க வேண்டும். தாராளமயமாக்கலுக்குப் பின் பணம் ஒரே இடத்தில் தேங்காமல் அந்தப் பணம் 24 மணி நேரமும் சுற்றி வர வேண்டும். அந்தப் பணச்சுற்றே தனிமனிதப் பயன்பாடு வருவாய் என்ற நிலையில் சுழலுகின்றது.

பல பணப் பரிவர்த்தனைகள் பல முறை மாறி சுற்றுகளாக வரும்போது இயற்கையாகவே பணப்புழக்கம் கூடுதலாகின்றது. இதனால் நாட்டின் வருவாயும் நேர்முக மறைமுக வரிகளாக கூடுகின்றது. மக்களுக்கும் ஒரு பக்கம் செலவீனம். இன்னொரு பக்கத்தில் இன்னொரு தரப்பினருக்கு வருமானமும் கிடைக்கின்றது.

இதைத்தான் சீனப் பழமொழியில் சொல்வார்கள். "பேப்பர் கரன்சி காற்றில் ஓடுவதைப் போல சுற்றி ஓட வேண்டும். 100, 500, 1000 என்ற வகையில் பணம் காற்றில் ஓடிக் கொண்டே இருக்கும்" என்பது சீன மக்களின் கருத்தாகும். அதேபோல சிறு மதிப்பீட்டில் உள்ள நாணயங்கள் ஒரே இடத்தில் தங்கலாம் என்பது சீன மக்களின் பார்வை. பொருளாதாரத்தின் மீதானநம்பிக்கையும் கூட.

மஹாராஷ்டிரா மாநிலம் தான் ஐந்து லட்சம் கோடிக்கு வரவு செலவு திட்டம் தயாரித்தனர். தமிழக அரசு இந்த ஆண்டில் இதைப் பின்பற்றலாம்.

தேவை தொலைநோக்குத் திட்டங்கள்:

மாநிலத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது அவசியம். 1996-2001-ல் முதல்வர் கலைஞர் ஆட்சியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும்சென்னை பற்றிய ஒரு தொலைநோக்குத் பார்வை திட்டத்தைத் தயாரிக்க ஒரு நிபுணர் குழுவை நியமித்தார்.

ஆனால், அவருக்கு பிறகு பதவியேற்ற ஜெயலலிதா2001-ல் அரசு அதனை கைவிட்டது. மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அரசு, 2023-ல் தமிழகம் (Vision 2023) என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2017-ல் வெளியிட்டது. ஆனால், இவை இன்றளவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. செயல்வடிவம் பெறவில்லை. தற்போது தமிழ்நாடு 2030 மட்டுமல்ல 20-40 வரையான ஒரு தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தில் மால்தஸ் கோட்பாடுகளின்படி மக்கள் தொகை பெருக்கம் கொண்ட இந்தியாவில் இப்படி பொருளாதார சிக்கல்கள் அவ்வப்போது பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இப்படிச் சுமையான காலகட்டத்தில் அரசு வழங்கும் இலவசத் திட்டங்க்ள் சலுகைகளை நிறுத்தியும்விடமுடியாது. மதுவிலக்கு என்பதும் கேள்விக்குறியாகஇருக்கின்றது.

நிதி ஆதாரம் இருந்தால்தான் மாநிலம் திடமாக எதையும்முன்னெடுக்க முடியும். இதற்கு ஆதாரங்கள் மாநிலஉள்வருவாய், மத்திய அரசு மூலம் வரும் வருவாய்அயலகக் கடன்கள், நிதி நிறுவனங்களிடம் பெறும்கடன்கள் இதைக் கொண்டுதான் திட்டங்களைத் தீட்டமுடியும். அப்போது தான் ஒரு ஜனநாயகத்தில் மக்கள்நல அரசாக திகழ முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அண்டை மாநிலங்கள்கேரளா, கர்நாடகா, ஆந்திரா போல நீர்வளம், வனவளம், தாதுவளம் நமக்கு அதிகமில்லை. மனித ஆற்றல் மற்றும்இருக்கின்றது. இதோடு பெறப்படுகிற நிதிஆதாரங்களைக்கொண்டு நிர்வாகத்தை நடத்தவேண்டிய சூழல்.

பணப்புழக்கம் அவசியம். அந்தப் பணப்புழக்கம்வேண்டும் என்றால் தொழில்கள் சிறக்க வேண்டும். திருப்பூர் போன்ற நகரங்களில் வெளிமாநிலத்தைச்சார்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.

மாநில சுயாட்சி மாநிலங்களுக்கு அதிகாரம் மத்திய தொகுப்பிலிருந்து சமன்பாடான நிதி ஒதுக்கீடு மாநிலங்களிடையே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1960-களிலிருந்து எழுந்துள்ளது.

அந்தவகையில் மத்திய தொகுப்பிலிருந்து வருவாயைப் பெறுவதில் மேற்குவங்க முதல்வரான ஜோதிபாசு தனது அரசின் வெள்ளை அறிக்கை வாயிலாக மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்குகின்ற நிதி ஓரளவு அதிகம்பெறக்கூடிய வகையில் போராடிப் பெற்றார்.

இன்றைக்கு தொற்று நோயினால் அங்கும் தொழில்கள்முடங்கிவிட்டன. இதையும் சீர் செய்ய வேண்டும்.

"இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"
- குறள் 385:

அதாவது முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். அதற்கானதிட்டமிடல்தான் இன்றையத் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+