கிரிக்கெட் சூதாட்டம்: சிபிஐயிடம் ஐ.எஸ். பிந்த்ரா வாக்குமூலம்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து இந்திய வீரர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வரும் சிபிஐயிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா திங்கள்கிழமை வாக்குமூலம் அளித்தார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக சிபிஐவிசாரித்து வருகிறது. குற்றச்சாட்டுகள் கூறிய மனோஜ் பிரபாகர், ஐ.எஸ். பிந்த்ரா ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்திருந்தது. அதற்குமுன்னதாக, பல கிரிக்கெட் வீரர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந் நிலையில், சிபிஐ அலுவலகத்துக்கு பிந்த்ரா நேரில் வந்தார். இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கபில்தேவ் மீது கூறிய குற்றச்சாட்டுநேரிடையாக ஆதாரம் இல்லை என்று தெரிவித்திருந்த அவர், தான் கூறிய மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளித்தார். அதற்கான சிலஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் அவர் ஒப்படைத்தார்.
சிபிஐயிடம் பிந்த்ரா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததுடன், சில முக்கிய ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளது இவ் வழக்கில் முக்கிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. பிந்த்ரா கொடுத்துள்ளது முக்கியமான ஆதாரங்கள் என்றும், இவற்றின் மூலம் இவ் வழக்கில் மேலும் சிறப்பாக புலனாய்வுசெய்யமுடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிந்த்ரா வாக்குமூலம் கொடுத்துவிட்ட நிலையில், அடுத்து மனோஜ் பிரபாகர் சிபிஐயிடம் வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிகிறது.
3 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக கிரிக்கெட் வீரர்கள் மீது லஞ்ச ஊழல் புகாரை மனோஜ் பிரபாகர் தெரிவித்தார். ஆனால், கிரிக்கெட் சூதாட்டத்தில்ஈடுபட்ட வீரரின் பெயரை இதுவரை அவர் தெரிவிக்கவில்லை. குற்றச்சாட்டு குறித்து விசாரித்த நீதிபதி சந்திரசூட்டிடமும் அவர் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில், மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது கபில்தேவ்தான் என்று பிந்த்ரா தெரிவித்தார். இதனால், இந்திய கிரிக்கெட்ரசிகர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், நான் தெரிவித்த கருத்துக்கு நேரடியானஆதாரம் ஏதும் இல்லை பிந்த்ரா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.