தமிழகத்தில் இன்று
நானே தலை-வன்! - திண்டிவனம் ராமமூர்த்தி
சென்னை:
நான் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர். சோனியா முடிவை ஏற்கமாட்டேன் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திகூறியுள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்தால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் செவ்வாய்க்கிழமை கூட்டம்நடத்தினார். கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொள்ளாமல் என்னை சோனியா நீக்கியுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பே இல்லை. அவர் மாவட்டத் தலைவர் பதவிக்குக் கூட லாயக்கு இல்லாதவர்.
அர்ஜுன்சிங்கின் நிர்பந்தத்தால் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கோஷ்டி அரசியல் நடத்துவதில் வல்லவரான அர்ஜுன் சிங்கை இந்திராவும்,ராஜீவும் தொலைவிலேயே வைத்திருந்தனர். ஊழலில் சிக்கியவர், காங்கிரஸுக்குத் துரோகம் செய்து திவாரி காங்கிரஸ் ஆரம்பித்தவர். அவர்சொன்னதைக் கேட்டு என்னை சோனியா நீக்கியுள்ளார்.
இளங்கோவனை தலைவராக நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். எனக்கு பல மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 37ஆண்டுகளாக காங்கிரஸில் இருப்பவன். வேறு எந்தக் கட்சிக்கும் போகமாட்டேன். நானே தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்றுதொண்டர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பப்படி நான் தொடர்ந்து தலைவராக நீடிப்பேன்.
தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் என்னை நீக்கியதன் மூலம் காங்கிரஸ் செல்வாக்கு பாதிக்கும். மேலும் காங்கிரஸ் அழிவுக்கு கட்சி மேலிடம் வழிவகுத்துவிட்டது. நானும் எனது ஆதரவாளர்களும், தொண்டர்களின் ஆதரவுடன் கட்சியை நடத்துவோம். நாங்களே உண்மையான காங்கிரஸ்.
எனக்கு தங்கபாலு, குமரிஅனந்தன் ஆகியோர் ஆதரவு தெரிவிக்கின்றனர். காங்கிரஸில் பிளவு தவிர்க்க முடியாதது என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.
ராமமூர்த்திக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ்:
இதற்கிடையே, கட்சித் தலைமையை விமர்சித்துப் பேசிய திண்டிவனம் ராமமூர்த்திக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கட்சித் தலைமையை விமர்சித்துப் பேசிய உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு ராமமூர்த்திக்கு அந்த நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications