தமிழகத்தில் இன்று
ஓட்டுக்காக நாடகமாடுகிறார் கருணாநிதி ... ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
ஓட்டு வங்கிக்காக தலித் ஆதரவாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்ள முதல்வர் கருணாநிதி நாடகமாடுகிறார் என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் எஸ். ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கமாக உள்ள திமுகவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே சமீபகாலமாக நல்ல உறவு இல்லை. மூன்றுநாட்களுக்கு முன் தமிழகம் வந்த பிரதமர் வாஜ்பாய், பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே மீண்டும் சுமூக உறவை வலுப்படுத்தும் நோக்கில்முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி மீது கடும் குற்றச்சாட்டுகளை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என்பது போல் முதல்வர் கருணாநிதி பேசிவருகிறார். சம்பவத்துக்குக் காரணமான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார்.
சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலித்துகளின் வாக்குகளை மனதில் வைத்து அவர்கள் ஆதரவாளர்களாக தன்னைக்காட்டிக்கொள்ள கருணாநிதி முயற்சிக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் மற்றொரு வன்னியர் இயக்கம் உருவாக தமிழக அரசு ஆதரவாகச் செயல்படுகிறது.
எந்த பிரச்சினையானாலும், தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கட்சியாகவே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே சுமூக உறவு இல்லை என்பதை தமிழகம் வந்த பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.அது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் கலந்தாலோசிப்பதாக அவர் உறுதி கூறினார் என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.