அதிமுக - தமாகா கூட்டணியில் குழப்பம் என்கிறார் வைகோ
- சோ
நல்லதுதான் நடந்திருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பங்காரு லட்சுமணன், முஸ்லிம்களின் ஆதரவைப்பெறுவதற்கு பா.ஜ.க. முனைய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.
எந்த அரசியல் கட்சிக்கும் இம்மாதிரி பேச்சு புதிதல்ல என்றாலும், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, முஸ்லிம்களின் ஆதரவை நாடுகிற போதெல்லாம்,முஸ்லிம்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அறிவுரைதான் அதிகமிருக்கும்.
இம்முறையோ தாங்கள் எப்படி அவர்களை அணுக வேண்டும் என்பதைப் பற்றி பா.ஜ.க.வின் புதிய தலைவர் பேசியிருக்கிறார்.
தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலக்க வேண்டும்; இந்நாட்டில் எல்லோரும் ஹிந்துத்துவம் என்ற கலாசாரத்தில் அடங்குபவர்களே என்பதை நீங்கள் உணரவேண்டும் - என்பது போன்று பேசி, வாருங்கள் ஒரே கலாசாரத்தில் இணைவோம் என்று முஸ்லிம்களை அழைப்பதுதான், இதுவரை பா.ஜ.க.வின்வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இம்முறை இந்த வழக்கம் மாறி, முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்ட நாம் இதுவரை முனையவில்லை; இனி முஸ்லிம்களோடு நல்லுறவை வளர்க்க நாம்முனைய வேண்டும்; முஸ்லிம்கள் ஓட்டு நமக்குக் கிடைக்காது என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்வதை விடுத்து, பா.ஜ.க.வுக்கும்முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நாம் அகற்ற வேண்டும் என்று கட்சியின் தலைவரே பேசியிருக்கிறார்.
இதுவரை, முஸ்லிம் ஆதரவைப் பெறாததற்கு, தங்கள் அணுகுமுறையில் உள்ள குறைபாடும் காரணம்தான் - என்று பா.ஜ.க.வினர் பேசியதில்லை.இப்போது இப்படி அக் கட்சியின் தலைவரே பேசியிருப்பது - நல்ல மாற்றம்.
பா.ஜ.க., முஸ்லிம் விரோதக் கட்சியல்ல; ஆனால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது. இதை முஸ்லிம்கள்தான் அகற்ற வேண்டும் என்றுபா.ஜ.க.வில் பலர் நினைத்து வந்தார்கள்; இந்த நினைப்பு மாறி, இந்த தவறான எண்ணத்தை மாற்றுவதில் தங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று பா.ஜ.க.உணர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது.
நாட்டில் உள்ள, இரண்டு பெரிய சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாவிட்டால் பரவாயில்லை - என்று இயங்கி வருவது நாட்டின் அரசியலுக்குநல்லதல்ல. ஆட்சி எல்லா மக்களுக்கும் பொதுவானது; அதை நடத்திச் செல்லும் பொறுப்பேற்கிற கட்சி 20 சதவீத சிறுபான்மை மக்கள் எங்களைநம்பாவிட்டால் பரவாயில்லை என்று கூறிக் கொண்டிருக்க முடியாது.
மற்ற கட்சிகளைப் போல், மைனாரிட்டி மக்களின் ஓட்டுக்காக அவர்களைத் தனியாகப் பிரித்து வைத்து, உங்களுக்கு ஆபத்து; நான் காப்பாற்றுகிறேன்என்று பிரசாரம் செய், மக்களிடையே நிரந்தரப் பிளவை தோற்றுவிக்கவும் வேண்டாம்; அதே சமயத்தில் நீயும் ஹிந்துதான்; அதை ஏற்றுக் கொண்டுஎன் பின்னால் வா என்று ஏற்க முடியாத வாதத்தை முன்வைத்து சிறுபான்மையினரை குழப்பவும் வேண்டாம்.
இவற்றுக்கிடையில் ஒரு வழி உண்டு. மக்களிடையே ஜாதி, மதம் பேசி பிரித்து வைக்கும் வேலையை நாங்கள் செய்ய மாட்டோம். யாராக இருந்தாலும்எங்களுடைய தராசுக் கோல் நேராக நிற்கும் என்று கூறுகிற வழிதான் அது.
இப் பாதையைப் பா.ஜ.க. மேற்கொண்டால், அது அவர்களுக்கும் நல்லது, நாட்டு அரசியலுக்கும் நல்லது. அப்படி ஒரு நிலை வருகிற அறிகுறி, பாரதீயஜனதாவின் நாக்பூர் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தெரிகிறது. நல்லதுதான்.
இது ஒரு புறமிருக்க, நாங்கள் ராமர் கோவிலை விட்டு விட்டோம்; அரசியல் சட்ட 370-வது பிரிவு நீக்கம் என்பதையும் விட்டு விட்டோம் என்கிறவகையில் பா.ஜ.க. தலைவர் பேசியிருக்கிறார்.இவ் விஷயத்தில் அவருக்கே குழப்பம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
ஏனெனில், பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் பதவி ஏற்றால், அப்போது இவற்றை நிறைவேற்றுவோம் என்றும் அவர் பேசியிருப்பதாகச் சிலசெய்திகள் கூறுகின்றன.
இந்தக் குழப்பமே தேவையில்லை. ராமர் கோயில், பா.ஜ.க.வினால் விடப்பட வேண்டியது. கோயில் ஸ்தபதி வேலை, அரசியல் கட்சிக்கு உகந்தது அல்ல.