குப்பையை விற்கிறது சென்னை மாநகராட்சி
சென்னை:
சென்னை மாநகரில் குவியும் குப்பையை விற்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு லாரி லோடு குப்பை விலை 60 ரூபாய்.
கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகரில் குவியும் குப்பைகள் மாநகராட்சிக்குச் சொந்தமானவை. இந்தக் குப்பைகளின் மூலம்மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும், உரம் தயாரிக்கும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி சோதனைரீதியாக செய்து பார்த்தது.
அவை எல்லாம் வழக்கம்போல் தோல்வியில் முடியவே, இப்போது குப்பையை கிளறும் வேலையை விட்டு விட்டு, அதை வேறு நபர்களுக்கு விற்றுவிட தீர்மானித்துள்ளது.
வீட்டுத் தோட்டங்கள், விளை நிலங்களில் குப்பைகளை உரமாக பயன்படுத்த விரும்புவோர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பிரிவை அணுகும்படி சென்னைமாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு லாரி லோடு குப்பைக்கு 60 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. பணத்தை செலுத்தி விட்டு குப்பையை அவ்வளவு எளிதாக யாரும் அள்ளிக் கொண்டுபோக முடியாது. அதை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கான நிபந்தனைகளையும் மாநகராட்சி வகுத்துள்ளது.
அதற்கு உடன்படுபவர்களுக்கு மட்டுமே குப்பை. இல்லையேல் குட்பை சொல்லி அனுப்பி விடுகிறதாம் மாநகராட்சி.
தெருக்களில், வீதிகளில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்கென்றே சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளது மாநகராட்சி. குப்பை சேகரிப்புமையத்தில் இருந்து குப்பைகளை மொத்தமாக கொட்டும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு மட்டும் டன் ஒன்றுக்கு 150 ரூபாய் செலவாகிறதாம்.
இப்போது சேகரிப்பு மையத்திலேயே குப்பை விற்பனை செய்யப்படுவதால் இந்த செலவும் மிச்சம். 60 ரூபாய் வரவும் கிடைக்கிறது என்று கணக்குப்போட்டு தான் குப்பை விற்பனையில் இறங்கியுள்ளதாம் சென்னை மாநகராட்சி.
அதெல்லாம் ஓகே. குப்பை வாங்கலியோ குப்பை என்று கூவி விற்காமல் இருந்தால் சரி.












Click it and Unblock the Notifications