மீண்டும் மீண்டும் மூப்பனாரை சீண்டும் சொக்கர்
சென்னை:
த.மா.காவின் தற்போதைய அணுகுமுறை தமிழகத்திற்கு பெரிய தீமையைத் தரக் கூடியதாகிவிடும் என்று த.மா.கா. முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சொக்கர், கட்சித் தலைவர் மூப்பனாரை எச்சரித்துள்ளார்.
அதிமுகவுடன் அணி சேர்வது என்று த.மா.கா. எடுத்த முடிவை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர் சொக்கர். அதன்காரணமாகதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, மூப்பனாருக்கு வெருக்கடியை கொடுத்தார். ஆனால், தமாகாவைவிட்டு விலகாமல் அக்கட்சியின் தற்போதைய அரசியலை வெறுத்து ஒதுங்கி இருக்கிறார்.
தற்போது த.மா.காவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், சொக்கர்மீண்டும் மூப்பனாரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சொக்கர் அறிக்கையில் கூறியுள்ள விவரம் வருமாறு:
த.மா.காவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற கருணாநிதியின் அறிவிப்பு, அக்கட்சி அதிமுகவுடன் தொகுதி பங்கீடுகுறித்து பேரம் பேசும் சக்தியை வெகுவாக குறைத்து விட்டது. இனி த.மா.காவிற்கு அதிமுகவை விட்டால் வேறு வழியில்லை.ஜெயலலிதா இனிமேல் த.மா.காவை பதம் பார்க்க ஆரம்பித்து விடுவார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு காரணம், சமீபத்தில் மூப்பனார் பெயரில் திமுக அரசை கடுமையாகத் தாக்கி வெளிவந்தஅறிக்கையே. அவர் பெயரில் வெளிவந்த அந்த அறிக்கை கருணாநிதியை கோபப்படவும், வேதனைப்படவும் வைத்ததை விட,அது திமுகவின் தன்மானத்தையே உரசிப் பார்ப்பதாக அமைந்து விட்டது.
ஒரு இயக்கம் வெற்றி பெற அதன் தலைவர் வழி நடத்த, தொண்டர்கள் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். ஆனால், இன்றுதமாகாவில் ஒரு "பிரஷர் குரூப் முடிவுகளை தீர்மானித்து அந்த வழியில் தலைவரை நடத்திச் செல்கிறது.
நான் திமுகவுக்காக வக்காலத்து வாங்கவில்லை. கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற முயற்சிக்கட்டும். ஆனால்,அவரை மாற்றி விட்டு அந்த இடத்தில் மீண்டும் யாரை அமரச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது தான் தமிழக நலனில் அக்கறைகொண்ட ஒவ்வொரு மனிதனும், தமாகாவை பார்த்து விரலை நீட்டி கேட்கும் கேள்வி.
ஒரு நல்ல கட்சி ஒரு சிலரால் இப்படி வீணாகப் போகிறதே என்று எண்ணும்போது என் போன்றவர்களால் அழுது புலம்புவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய வழியில்லை. அப்துல்கலாம் போன்று ப.சிதம்பரம் ஒரு அரசியல் விஞ்ஞானி. அவர் கூறும் கருத்துகட்சியில் சிறுபான்மை கருத்தாக இருக்கலாம்.
ஆனால், அணுசகதியை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்று ஆயிரம் பேர் கூடி நின்று கூச்சலிடுவதை விடஅப்துல்கலாம் ஒருவர் சொல்லுவது தான் சரியாக இருக்கும்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிஞர்களோடு விவாதித்து அமைதியான முறையில் சிந்தித்து தெளிவான கருத்துக்களை சொல்லும்ஆற்றல் படைத்த சிதம்பரம் போன்றவர்களின் கருத்துக்கள் கூட ஏற்கப்படவில்லையோ என்று வேதனைப்படுகிறேன்.
தற்போதுள்ள இந்த அணுகுறை ஒருபோதும் கட்சியை நிரந்தர வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லாது என்பது மட்டும் அல்ல,தமிழகத்திற்கும் பெரிய தீமையைத் தரக் கூடியதாகிவிடும் என்று சொக்கர் கூறியுள்ளார்.