தப்பியது காங்கிரஸ் ஆட்சி ?
பாண்டிச்சேரி:
த.மா.காவிலிருந்து பிரிந்து சென்ற கண்ணன் அமைச்சரவையில் நீடிப்பதற்கு மூப்பனார் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து புதுவை கூட்டணி அரசுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி தீர்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கடந்த 20-ம் தேதி த.மா.கா எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் அக்கட்சியில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்படுவதாக கூறி சபாநாயகர்அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார்கள்.
புதுவை காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் அவர்கள் தனித்து இயங்க முடிவு செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கண்ணன் பிரிவினருக்கும், தேனீஜெயக்குமாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் புதுவை கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
கடந்த 20 -ம் தேதி தன்னைப்பற்றிய புத்தகம் வெளியிடும் பொழுது பல தலைவர்கள் சென்னையில் இருந்த பொழுது கண்ணன் கட்சியை உடைத்ததுமூப்பனாருக்கு அவர் மேல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று சண்முகத்திடம் அவர் கெடுபிடிசெய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சண்முகம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நிலைமையை எடுத்துக்கூறினார். கண்ணன் ஆதரவாளர்களின் ஆதரவுதனக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அறிவித்திருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும், தேவைப்பட்டால் அவர்கள் காங்கிரஸில் சேரஇருப்பதாகவும் சண்முகம் சோனியாகாந்தியிடம் விளக்கினார்
இதனைத் தொடர்ந்து சோனியாகாந்தி மூப்பனாரிடம் போனில் பேசி அவரை சமாதானம் செய்யதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கண்ணன்அமைச்சரவையில் நீடிக்க மூப்பனார் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை அரசுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி நீங்கியிருப்பதாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்க, கண்ணன் புதிய கட்சி ஆரம்பிக்கின்ற முயற்சியிலும் மும்முரமாக இருக்கிறார். புதுவை மக்கள் காங்கிரஸ் என்று தனது கட்சிக்குபெயர் வைக்க முடிவு செய்திருக்கும் கண்ணன் கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள் புதுவையில்.