அழகிரியிடம் நஷ்ட ஈடு வசூலிக்கக் கோரி கோர்ட்டில் வழக்கு
சென்னை:
மதுரையில் அழகிரிக்கு ஆதரவாக எரிக்கப்பட்ட பஸ்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை திமுகவிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த அன்னை நற்பணி மன்றத்தின் தலைவர் செண்பகமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வருமாறு:
சமீபத்தில் திமுக தலைமைக்கும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையிலும்,தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் 12 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மேலும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அழகிரி முதல்வரின்மகன் என்பதால் அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எரிக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீட்டுத் தொகையை திமுக தலைமையிடமிருந்து தமிழகஅரசு வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும் தென்மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.