லால் பகதூர் சாஸ்திரி மரணம்: மீண்டும் விசாரிக்கக் கோருகிறார் மகன்
லக்னோ:
34 வருடங்களுக்கு முன், அப்போதைய சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் மரணமடைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மகன் சுனில் சாஸ்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச் செயலாளராக இருக்கும் சுனில் சாஸ்திரி நிருபர்களிடம் கூறுகையில்,
என் தந்தை, இந்தியா, பாகிஸ்தான் இடையேயுள்ள பிரச்சனை குறித்து, தாஷ்கண்ட் நகரில் பாகிஸ்தான் சர்வாதிகாரி அயூப் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து உயிருடன் திரும்பவில்லை. அவரது மரணமடைந்தார் என்ற செய்திதான் கிடைத்தது. அவர் எப்படி இறந்தார் என்பதுமர்மமாகவே உள்ளது.
எனது தந்தையின் மரணம் குறித்து மத்திய அரசு, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மரணத்தின் பின்னணி குறித்து ஆராய வேண்டும்.
இரண்டாவது உலகப்போரின் போது, சுபாஷ் சந்திரபோஸ் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்ததகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவர் இறந்தது குறித்து சமீபத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.இதேபோல் எனது தந்தையின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றார் சுனில் சாஸ்திரி.
காங்கிரஸ் கட்சியிலிருந்த சுனில் சாஸ்திரி, சில வருடங்களுக்கு முன் பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.