போர் நிறுத்தம்: காஷ்மீரில் அமைதியாய் தொடங்கியது ரம்ஜான் நோன்பு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ரம்ஜான் மிக அமைதியாகத் தொடங்கியது.
பக்தர்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள மசூதியில் ரம்ஜான் நோன்பைத் தொடங்கினர். முன்னதாக, நவம்பர் 19 ம் தேதி, பிரதமர் வாஜ்பாய், ரம்ஜான்மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார். இது திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
அங்கு வாழும் முஸ்லீம்கள், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திங்கள்கிழமை நள்ளிரவு தங்கள் வீடுகளிலிருந்து மசூதிக்குச் சென்று ரம்ஜான்விரதத்தைத் தொடங்கினர்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட ரம்ஜான் குறித்து, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்சி டிரைவர் அப்துல் மஜித் கூறுகையில்,இவ்வளவு வருடங்களாக, ரம்ஜானை சுதந்திரமாகக் கொண்டாட முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விடுதலையாக உள்ளது.
முன்பெல்லாம் ராணுவ வீரர்கள், டாக்சியில் செல்லும் போது பலமுறை சோதனை செய்த பின்பே எங்களை விடுவர். ஆனால் இந்த முறை 300கிலோமீட்டர் தூரம் வரை ராணுவ வீரர்களின் தலையீடு இல்லாமலே நான் டாக்சியை ஓட்டி வந்து விட்டேன் என்றார்.
ரபி மிர் என்பவர் காஷ்மீரிலுள்ள தனது மகன் குடும்பத்துடன் இந்த வருட ரம்ஜானைக் கொண்டாடுகிறார். அவர் கூறுகையில் கடந்த ஆறு வருடமாக நான்காஷ்மீரில் ரம்ஜானைக் கொண்டாடி வருகிறேன். ராணுவ வீரர்களின் குறுக்கீடுகள், வெறுப்பேற்ற வைக்கும்.
எந்த வித குறுக்கீடும் இல்லாமல் ரம்ஜானைக் கொண்டாடுவதையே நான் விரும்புகிறேன். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்தமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.