லாரி மோதி மாணவி பலி: மாணவர்கள் சாலைமறியல்
மதுரை:
மதுரையில் 12 ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியின் மேல் லாரி மோதியதில் அவர் உயிரிழந்ததையடுத்து 1000 க்கும் மேற்பட்ட சக மாணவ,மாணவியர் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு காமராஜர் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது லாரி மோதியது. அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். அவர் பெயர் மணிமேகலை. வயது 16. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார்.
விஷயம் பரவ ஆரம்பித்ததும் விபத்தில் இறந்த மணிமேகலை படிக்கும் பள்ளியில் படித்து வரும் இதர மாணவ, மாணவியர் 1000 க்கும் மேற்பட்டோர்சாலைமறியல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்குப் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலையில்லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
யு.என்.ஐ.