வெல்டன் கிளிண்டன்!
அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்து பிரியாவிடை பெறுகிறார் பில் கிளின்டன்.
கிளிண்டனின் ஆட்சிக்காலம் பல திருப்பங்களும், நிகழ்வுகளையும் கொண்ட, சுவாரஸ்யமான ஒரு நாவல் போன்றது.
சந்தித்த ஒவ்வொரு பிரச்சினையையும் அவர் லாவகமாக சமாளித்தது அவரை உலக அளவில் பிரபலப்படுத்தியது. வெளிநாடுகளுடன் உறவை வலுப்படுத்திக்கொள்வது, சர்வதேச பிரச்சினைகளில் அக்கறை காட்டியது என பல முகங்களைக் கொண்டவர் கிளிண்டன்.
அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்த போது நடந்த மிக முக்கிய சம்பவங்களைத் திரும்பிப் பார்ப்போம். 1992 ம் ஆண்டு கிளின்டனின் அரசியல் சகாப்தம்தொடங்கியது.
1992 ம் ஆண்டு ஜூலை மாதம் 16 ம் தேதி ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதே ஆண்டு நவம்பர் 3 ம் தேதி 43 சதவீதஓட்டுக்களைப் பெற்றார்.
அமெரிக்காவின் 42 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவிக்கு வந்த ஒரு வருடத்தில் தனது பொருளாதார திட்டத்தை அமல்படுத்தினார்.கிளிண்டனுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தவற்றில் முக்கியமானது அவரது பொருளாதாரக் கொள்கை.
சோமாலியா நெருக்கடி ..
கிளிண்டனின் சர்வதேச நடவடிக்கைகளில் முக்கியமானது சோமாலியா நெருக்கடி. அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதையடுத்து 1993, அக்டோபர் 7-ம் தேதி அவர்களது நலனிற்காகவும், புரட்சியாளர்களைஅடக்குவதற்காகவும் மேலும் 15 ஆயிரம் அமெரிக்க வீரர்களை அனுப்பி வைத்து நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டார் கிளின்டன்.
செக்ஸ் புகார் ..
1994-ம் ஆண்டு கிளிண்டனுக்கு மோசமான ஆண்டு. பவுலா ஜோன்ஸ் என்பவர் கிளின்டன் மேல் செக்ஸ் வழக்கு தொடர்ந்தார். அதே வருடம் ஒயிட் வாட்டர்விவகாரம் பற்றி அமெரிக்க காங்கிரஸ் விசாரணையைத் தொடங்கியது.
மீண்டும் அதிபர் ..
1996-ம் ஆண்டு கிளின்டன் 2 வது முறையாக அதிபராகப் பதவியேற்றார். இந்த முறை 49 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார் கிளின்டன். இரண்டுவருடங்களாக சத்தம் இல்லாமல் சாதனை செய்து வந்த கிளின்டனுக்கு, மோனிகா லெவின்ஸ்கி, கிளிண்டன் தன்னிடம் செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டார் என்றுபுகார் கூறினார். இதைக் கிளின்டன் மறுத்தார்.
ஏப்ரல் மாதம் 2 ம் தேதி 1998 ம் ஆண்டு கிளின்டன் மீது பவுலா ஜோன்ஸ் தொடர்ந்த செக்ஸ் புகார் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே வருடம் ஆகஸ்ட் 7 ம் தேதி கென்யா, டான்சானியா நாடுகளில் இருந்த அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடித்து, கிளின்டனுக்கு தலைவலி ஏற்பட்டது.இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர் பின்லேடன் என்று தெரிய வந்தது.
இதே வருடம் அக்டோபர் 23 ம் தேதி கிளின்டன் முயற்சியால் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினுக்கும், பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்துக்கும் இடையேஒப்பந்தம் ஏற்பட்டது.
ஈராக் மீது தாக்குதல் ..
1998 ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஆயுத சோதனை செய்ய ஐக்கிய நாடுகள் குழுவை அனுமதிக்க மறுத்ததால், ஈராக் மீது தாக்குதல் நடத்தஉத்தரவிட்டார் கிளின்டன்.
2000 மாவது ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி நியூயார்க் நகர செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கிளின்டன் மனைவி ஹிலாரி அறிவித்தார்.
அதே ஆண்டில் செப்டம்பர் 20 ம் தேதி கிளின்டன் மற்றும் ஹிலாரிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் ஒயிட் வாட்டர் விவகாரம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே கிளின்டனின் பதவிக்காலம் 2001 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் தேதியுடன் அமெரிக்க அதிபர் கிளின்டனின் பதவிக்காலம் முடிவடைவதால்2000 மாவது ஆண்டு நவம்பர் மாதம் 7 ம் தேதி அமெரிக்காவின் அடுத்த தேர்தல் நடந்தது.
குழப்பத் தேர்தல் ..
தேர்தலில் அல்கோரும், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷூம் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை துவங்கியது. யாருக்கு மெஜாரிட்டி என்பதில் இழுபறி ஏற்பட்டது.அதே சமயம் நியூயார்க் செனட் உறுப்பினராக கிளின்டனின் மனைவி ஹிலாரி தேர்வு செய்யப்பட்டார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமுடன் நடந்த போரில் அமெரிக்கா, 58 ஆயிரம் வீரர்களை இழந்தது. 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், வியட்நாமுக்கு 3நாட்கள் பயணமாக கிளின்டன் சென்றார். வியட்நாம் போருக்குப் பிறகு ஒரு அமெரிக்க அதிபர் வியட்நாம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
டிசம்பர் 23-ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தது. அல்கோர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து ஜார்ஜ் புஷ் ஜூனியர் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டார்.
கிளிண்டனின் பதவிக்காலம், அமெரிக்காவுக்கு எப்படி திருப்திகரமாக இருந்ததோ, அதேபோல இந்தியாவுக்கும் சில பலன்களைக் கொடுத்துள்ளது.துவக்கத்தில் இந்தியாவுடன் உரசலாகத்தான் கிளிண்டன் இருந்தார்.
பாகிஸ்தானில் நடந்த ராணுவப் புரட்சி, காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் தீவிரவாத செயல்கள், தெற்காசியாவில் இந்தியாவுக்கு இருக்கும்பாதுகாப்பின்மை, இத்தனையையும் மீறி இந்தியா கடைப்பிடித்து வரும் அமைதி ஆகியவை அவரை இந்தியாவின் பால் ஈர்த்து விட்டது.
கிளிண்டன் தனது மகள், மாமியாருடன் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 20 ம் தேதி இந்தியா வந்தார். இங்கு 5 நாட்கள் தங்கியிருந்தார்.
கிளின்டனுக்கு அளிக்கப்பட்ட ராஜ மரியாதை அவரை மிகவும் அசர வைத்தது. இந்தியாவின் உபசரிப்பு அவரை திக்குமுக்காட வைத்து விட்டது.
ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குச் சென்ற கிளின்டன் இந்தியர்கள் கொடுத்த வரவேற்பால் உணர்ச்சி பெருமிதத்தில்ஆனந்தமடைந்தார்.
கார்கில் போர், கிளின்டன் இந்தியா வந்திருந்த போது காஷ்மீரில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது ஆகியவை அவருக்கு பாகிஸ்தானின் மீதுகசப்புணர்வைத் தூண்டி விட்டது.
இந்தியாவும், அமெரிக்காவும் புதிய அத்தியாயத்தைத் துவக்க கிளிண்டன் வழி வகுத்துள்ளார் என்றால் தவறில்லை.