கண் திறந்தார் அம்மா .. பரவசத்தில் பக்தர்கள்
சேலம்:
சேலத்தில் 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாரியம்மன் கண் திறந்த அதிசய நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சேலத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மாரியம்மன் கோயில் ஆண்டிப்பட்டி பென்ஷன் லைன் வடக்குத் தெருவில் உள்ளது. இந்தகோயில் கல்யாண விநாயகர், முருகன் சந்நிதியில் இருக்கிறது.
ஆண்டு தோறும் இக்கோயிலில் விழா நடப்பது வழக்கம். இங்கு அதிகமாக பெண்கள் வருவதுண்டு. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஒரு வயதான பெண்,கோயிலுக்கு பக்திப் பரவசத்துடன் ஆடியபடியே வந்தார். அருள் வந்த பெண், அம்மன் கண் திறந்த அதிசயத்தைக் கூறினார்.
வழக்கமாக அம்மன் சிலை கருமை நிறத்தில் இருப்பதால் கண் முழுவதும் கருப்பாகத் தான் இருக்கும். விழாக் காலத்தில் மட்டும் வெள்ளியில் செய்த கண்வைக்கப்படும். ஆனால், கண் திறந்த பின் வெண்படலத்துடன் கருவிழியும் காணப்பட்டது என அம்மனைத் தரிசித்த பக்தர்கள் பயபக்தியுடன் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலின் கோபுரம் ஆடியது அதிசய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இதனால் சேலத்திற்கு நல்ல காலம் பிறக்கும்என பொதுமக்கள் நம்புகின்றனர்.
மாரியம்மன் சிலை, அமர்ந்திருக்கும் நிலையில் 3 அடி உயரம் உடையது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் கண் திறந்த தகவல் பரவியதால்கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனைப் போலீசார் கட்டுப்படுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் நடை மூடப்பட்டதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.