சாவு 30,000 ஆக உயர்வு
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பச் சாவு 30,000 ஆக உயர்ந்துள்ளது.
பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் எங்கு திரும்பினாலும் பிணங்களும், இடிந்து விழுந்த கட்டிடங்களுமாகக் காட்சியளிக்கின்றன.தோண்டத் தோண்ட பிணங்கள் குவிந்து கொண்டே இருப்பதால் சாவு எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகின்றன.
பூஜ் நகரில் மட்டும் இதுவரை 10, 000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற ஊர்களில் 8 ஆயிரம் உடல்கள் மீட்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி உயிருக்குப் போராடி வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக பூஜ், அகமதாபாத் ஆகிய ஊர்களில் முழுவீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. குஜராத்தில் உள்ள அஞ்சார், மோர்பி, துருல்,பச்சாவ், ஜோடியான், தரன்தரா ஆகிய இடங்களுக்கு மீட்புப் பணியாளர்களும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே இந்திய விமானப்படை விமானங்கள் குஜராத்தின் பல பகுதிகளுக்கும் சுமார் 180 முறை பறந்து சென்று நிவாரண உதவிகளைவழங்கியுள்ளன. உலகத்தின் மிகப்பெரிய எம்.ஐ. 26 ஹெலிகாப்டர் சண்டிகர், அமிர்தரசில் இருந்து 50 ஆயிரம் போர்வைகளை பூஜ் நகருக்கு எடுத்துச் சென்றது.
இந்தியக் கப்பல்படையின் ஐ.என்.எஸ்.சட்லஜ், ஐ.என்.எஸ். நிர்தேசப் போர்க்கப்பல்கள் கண்ட்லா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக்கப்பல்கள் தற்காலிகமாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பூஜ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வெட்ட வெளியில் கூடாரம் போட்டு தங்கி உள்ளனர். பூஜ்ஜில் 170 வருட பழமை வாய்ந்த அருங்காட்சியகம்,கட்ச் ராஜாவின் பிரம்மாண்ட அரண்மனை உள்பட ஏராளமான நினைவுச் சின்னங்கள் தரைமட்டமாகி விட்டன.
பூஜ் நகரில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. அரசு கட்டிடங்களும் தவிடுபொடியாகி விட்டதால் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வெட்ட வெளியில் தங்கியிருக்கிறார்கள்.
அகமதாபாத்தில் பள்ளி ஒன்று இடிந்து விழுந்து 70 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு 3 நாட்களாக நடந்தமீட்புப்பணியில் 39 உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. ஞாயிற்றுக்கிழமை 10 மாணவர்கள் உயிரோடு மீட்கப்பட்டு விட்டனர்.
பிணங்களைத் தகனம் செய்வதற்கு விறகுகள் கிடைக்காததால் பிணங்களை ஒரே சிதையில் மொத்தமாகக் குவித்துத் தகனம் செய்கிறார்கள். ஆங்காங்கேஉடல் தகனம் நடக்கிறது.
பூஜ் நகருக்கு வரும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் வெடிப்பு விழுந்துள்ளது. சில வெடிப்புகள் 5 அடி ஆழத்துக்கு பள்ளமாக இருக்கின்றன. இதனால் உணவுப்பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் பூஜூக்கு வர முடியாமல் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.