தாகத்தில் தவிக்கும் யானைகள்
கோவை:
மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், காட்டு யானைகள் தண்ணீரைத் தேடி நாட்டுப் பகுதியை நோக்கி படையெடுக்கத்தொடங்கியுள்ளன. இந்த படையெடுப்பில் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி இறந்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதி, உடுமலை முதல் நீலகிரி வரை விரிந்து பரந்து கிடக்கிறது. இந்த மலைப் பகுதி கேரள மாநிலத்தையும்,தமிழகத்தையும் பிரிக்கும் எல்லையாகவும் இருந்து வருகிறது.
இந்திரா காந்தி வன உயிரினச் சரகம், முதுமலை, டாப்சிலிப் உள்பட பல்வேறு இடங்களில் வன உயிரின காப்பகங்கள் உள்ளன.
இது தவிர வனப் பகுதியில் பல்வேறு விலங்குகளுக்கு புகழிடமாகத் திகழ்கிறது. இங்கு அதிக பட்சமாக காட்டெருமைகளும், யானைகளும் அதிகம்.
இந்த ஆண்டு வனப் பகுதியில் போதுமான மழை பெய்யாததால், வன விலங்குகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.
ஆண்டு முழுவதும் மழையில்லா விட்டாலும், வற்றாது ஓடும் சிறு ஓடைகளும் கூட இந்த முறை வற்றி விட்டன. கூட்டப்பள்ளம், வெள்ளியங்காடு,பில்லூர் ஆகிய சிறு ஓடைகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விட்டது.
இதையடுத்து ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், கோவனூர், தேக்கம்பட்டி, போன்ற இடங்களில் யானைகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் பகுதியில் தரைப் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள அனைத்துப் பயிர்களையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளன. கரும்பு, வாழை உட்பட தானியவகைகளான சோளம், ராகி போன்ற பயிர்களும் நாசப்படுத்தப்பட்டு விட்டன.
விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குச் சேமித்து வைத்திருக்கும் பயிர்களையும் யானைகள் சூறையாடிச் செல்கின்றன. வனப் பகுதியிலிருந்த யானைகள் இரவில்தண்ணீரைத் தேடி நிலப் பகுதிக்கு வந்து செல்கின்றன.
தரைப்பகுதியில் மனிதர்களைக் கண்டால் மிரட்டி, துரத்துகின்றன. எனவே இப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். தோலம்பாளையம் புதூர் அருகேகாட்டு யானைகள் முற்றுகையிட்டு முத்துச்சாமி என்ற கூலித் தொழிலாளியை காலால் மிதித்துக் கொன்றது.
இதே போன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் ஒருவரை யானை தாக்கிக் கொன்றது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும், ஆனைகட்டி, வீரபாண்டிபுதூர், தடாகம் ஆகிய பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகமாக உள்ளன.
இங்கு செங்கள் தயாரிக்கும் தொழிலுக்காக பெரிய தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பர். இந்தப் பகுதிகளுக்கு வரும் யானைகள் அந்த தண்ணீர்தொட்டிகளில் இருக்கும் தண்ணீரை அருந்துவதுடன், அதனை ""குளியலுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றன.
தண்ணீர் போதுமானதாக இல்லையென்றால், தண்ணீர் தொட்டியை உடைத்து சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இந்த யானைகளின் அதிரடித் தாக்குதலால்மலையோர விவசாயிகள் நிலை குலைந்து போய் உள்ளனர்.
சில இடங்களில் மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தாலும், எல்லா இடங்களிலும் இந்தப் பாதுகாப்பு பயன்படுவதில்லை. எனவே, சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரவேலி அமைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.