ஏழை தம்பதியருக்கு அரசு வேலை: ஜெ. உத்தரவு
சென்னை:
வறுமையில் வாடுவதாக மனு கொடுத்த தம்பதிகளுக்கு நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர்ஜெயலலிதா.
இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் தீவிரமாக , கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் கப்பலூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தான், மனைவியுடனும், கைக் குழந்தையுடனும் வறுமையில்வாடுவதாகவும், தனக்கு உறவினர் யாரும் இல்லை எனவும், தனக்கு உதவுமாறும் மனு கொடுத்திருந்தார்.
கணேசனின் மனுவை பரிசீலனை செய்து, கருணை அடிப்படையில் கணேசனுகுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ 10,000வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
கணேசனுக்கு மதுரை கள்ளிக்குடியிலிருக்கும் மகாத்மா காந்தி சத்துணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவுசங்கத்தில் கணக்கர் வேலையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கணேசனின் மனைவி ஜரினாவுக்கு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பணி நியமனத்துக்கான ஆணை, உதவித் தொகை ஆகியவற்றை ஜெயலலிதா வியாழக்கிழமை காலை கணேசனிடமும், அவரதுமனைவியிடமும் நேரில் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.