பெண் கள்ளச்சாராய வியாபாரி அதிரடி கைது
சென்னை:
சென்னையில் பெண் கள்ளச்சாராய வியாபாரியை போலீஸார் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னையில் பிரபல கள்ளச்சாராய வியாபாரியாக இருந்து வந்தவர் உமையாள். கடந்த 20 வருடங்களாக கள்ளச்சாராயவிற்பனையில் கொடி கட்டிப் பறந்து வந்தார். இவரைப் பிடிக்க போலீஸார் பலமுறை முயன்றும் அவர்களை ஏமாற்றி விட்டு தப்பிவிடுவாராம் உமையாள்.
இந் நிலையில் அவரை எப்படியாவது கைது செய்யுமாறு நகர போலீஸாருக்கு கமிஷனர் முத்துக்கருப்பன் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து அவரை பிடிக்க போலீஸார் ரகசிய திட்டம் தீட்டினர்.
அதன்படி இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையிலான போலீஸ் குழு, உமையாள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கேவிரைந்தது.
போலீஸாரைப் பார்த்ததும் உமையாள் தப்ப முயன்றார். ஆனால் போலீஸார் துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக மிரட்டினர்.இதையடுத்து தப்பும் முயற்சியை உமையாள் கைவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.