For Daily Alerts
Just In
சென்னை ஓட்டல்களில் டிஸ்கோ டான்சுகளுக்குத் தடை: முத்துக்கருப்பன்
சென்னை:
நமது தமிழ் கலாசாரத்திற்கு விரோதமானது என்பதால் டிஸ்கோ டான்ஸ் என்ற பெயரில் ஆடப்படும் ஆபாசநடனங்கள் இடம் பெறும் ஓட்டல்கள் மற்றும் கிளப்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வியாழக்கிழமைதோறும் முத்துக்கருப்பன் நிருபர்களுக்கு பேட்டி தருவார். அதன்படி இன்று நிருபர்களிடம் அவர்பேசுகையில் பொதுமக்களுக்கு பல எச்சரிக்கைகளை வெளியிட்டார்.
அவரது பேட்டியின் சாராம்சம்:
- சில ஓட்டல்களில் டிஸ்கோ என்ற பெயரில் ஆபாச நடனங்கள் ஆடப்படுகின்றன. இதுபோன்ற நடனங்கள் நமது தமிழ் கலாசாரத்திற்கு விரோதமானது. இதுபோன்ற நடனங்கள் இடம் பெறும் ஓட்டல்கள், கிளப்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆட்டோக்களில் வித்தியாசமான சப்தம் வர வேண்டும் என்பதற்காக சில ஆட்டோ டிரைவர்கள் சைலன்சர்களை எடுத்து விட்டு என்ஜினில் அட்ஜஸ்ட் செய்து உறுமலாக ஆட்டோ ஓட்டுகிறார்கள். அம்மாதிரியான ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்து விடுவர். எனவே என்ஜினில் மாற்றம் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் தவிர்க்க வேண்டும்.
- மருந்துக் கடைகளில் ஆணுறைகளை (காண்டம்) தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். சில ஆணுறை விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது. இதனால் மருந்துக் கடைக்கு வரும் பெண்கள், சிறுவர்கள் முகம் சுளிக்கிறார்கள். எனவே இதுபோல வெளியில் மாலை போல தொங்க விட்டு ஆணுறைகளை விற்கக் கூடாது.
- திருவிழாக்கள், நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு காதைக் கிழிக்கும் அளவுக்கு சப்தமாக பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன. இதனால் காதுகள் பாதிப்படைவதோடு மன நலக் கேடும் ஏற்படும். தற்போது அய்யப்ப சீசன் என்பதால் இது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சென்னை நகர எல்லைக்குள் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகிக்க கூடாது.
ஏர்ஹார்ன் எனப்படும் காற்று ஒலிப்பானை பயன்படுத்தாதீர்கள் என்று பலரை எச்சரிக்கை விடுத்தாகி விட்டது. ஆனாலும் பொதுமக்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. இனிமேல் ஏர் ஹார்ன் பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். இதுவரை 8,000 பேர் மீது இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு முத்துக்கருப்பன் கூறினார்.
Comments
Story first published: Thursday, November 22, 2001, 5:30 [IST]