உருக்கமான உரையுடன் விடை பெற்றார் கே.ஆர். நாராயணன்
டெல்லி:
சகிப்புத்தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்குமாறு இந்திய மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிகே.ஆர். நாராயணனன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அவரது பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி இன்று அவர் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலம் மக்களிடையேஉரையாற்ற உள்ளார். அந்த பேசவுள்ள உரையின் விவரம்:
நாட்டின் சில பகுதிகளில் மதவாதத்தால் சொல்ல முடியாத கொடுமைகள் நிகழ்ந்துவிட்டன. வன்முறையும் பகையும் வளர்ந்துவிட்டது. இந்தநிலையில் நல்ல குணங்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியம். மக்களிடையே அன்பையும் நற்குணங்களையும் வளரச்செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு உண்டு.
இந்தியாவின் ஜனநாயகத்தைப் பார்த்து உலகமே வியந்து நிற்கிறது. இதை நாம் பாதுகாத்தாக வேண்டும். நமது தேசத்தின் ஒற்றுமை எந்தப்பாடுபட்டாவது காத்திட வேண்டும்.
நமது நாட்டின் அடிப்படை பலமே மத சகிப்புத்தன்மையும், சமூக, மத நல்லிணக்கும் தான். எனது பெருமைக்குரிய நாட்டின் மக்களே,உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நமது கலாச்சாரத்தின் உயர் நாடியான மத சகிப்புத்தன்மையை எந்தக் காரணம் கொண்டும்விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். நமது அரசியல் சட்டம் சொல்லும் இந்த அடிப்படைக் கொள்கையை விட்டுக் கொடுக்காதீர்கள். நமதுஜனநாயகத்தின் ரகசியமே இது தான். பிற மத சகிப்புத்தன்மை மூலம் இந்த பரந்து விரிந்த தேசத்தின் ஒற்றுமையை காத்திடுங்கள்.
இந்த சகிப்புத்தன்மைக்கு நானே ஒரு உதாரணம். நான் கேரளாவில் ஒட்டப்பாலம் மக்களவைத் தொகுதியில் 3 முறை தொடர்ந்து வென்றேன்.அந்தத் தொகுதியில் பெருவாரியாக வசிக்கும் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள், உயர் ஜாதியினர் என்னைத் தேர்ந்தெடுத்து தங்கள்சகிப்புத்தன்மையை நிரூபித்தனர். சமயம் வரும்போது தங்கள் ஒற்றுமையை, சகிப்புத்தன்மையை அவர்கள் நிரூபித்தனர். இது போன்றவாய்ப்புக்களை நமது மக்களுக்கு தர வேண்டிய கடைமை அரசியல் தலைவர்களுக்கு உண்டு.
என் கிராமத்தில் வாழ்ந்த உயர் ஜாதியினரும் கிருஸ்துவர்களும் ஏழை தலித்தான எனக்கு கல்வி பயில உதவினர். அவர்களின் உதவிஇல்லாவிட்டால் இன்று நான் இல்லை.
பெரும்பான்மையாக வசிக்கும் இந்துக்கள் இந்து மதத்தின் பெருமை மிகுந்த சகிப்புத்தன்மையை தைரியமாய் முன் வைத்து பேச வேண்டும்.
இளைஞர்களுக்கு வழிகாட்ட மூத்தவர்கள் தவறிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். அதே போல பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மனிதமுகம் வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் போன்ற சமூகத்தின் இடுக்குகளில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் அமைய வேண்டும்.
இந்து வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கிருஸ்துவ இதயமும் கொண்ட இந்தியா வேண்டும் என்றார் விவேகானந்தர்.
1947ம் ஆண்டில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். நமது நாட்டில் பெரும்எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இவர்கள் எல்லாம் வேறு இடத்துக்குப் போய்விட நினைத்தால் கூட அதுமுடியாது. அவர்கள் இந்தியாவில் தான் வசித்தாக வேண்டும். இது தான் நிதர்சனம். பாகிஸ்தானால் எந்த விதமான கொடுமைகள் நமக்குநடந்தாலும் சரி, சிறுபான்மையினரை மரியாதையாக நடத்தி நமது மதத்தின் பெருமையை நிரூபித்துக் காட்டிடுவோம். சிறுபான்மையினரின்பாதுகாப்பை நாம் உறுதி செய்யாவிட்டால் அது இந்த தேசத்தின் புண் ஆகிவிடும். அந்தப் புண் தேசத்தையே அழித்துவிடும் என்றுஎழுதினார் நேரு.
என் தேசம் எல்லா மதங்களையும் கொண்ட, ஒற்றுமையான நாடாக திகழ வேண்டும் என்றார் மகாத்மா காந்தியடிகள்.
அந்தப் புனிதர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. நேருவின் வார்த்தைகளுக்கு இன்றும் அர்த்தம் இருக்கிறது.
அடுத்த ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அவர் மிகச்சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மிகச் சிறந்த மனிதாபிமானி. இந்த தேசத்தை மிகச் சிற்பபாய் வழிநடத்த அவருக்கு என் வாழ்த்துக்கள் எனஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தனது உரையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications