தமிழகத்தில் மழையோ மழை: ஒருவர் பலி
கும்பகோணம்:
தமிழகத்தில் நேற்றும் இன்றும் பல இடங்களிலும் நல்ல மழை பெய்ததைத் தொடர்ந்து பொதுமக்களும் காவிரி டெல்டா விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கும்பகோணத்தில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு நிற்காமல் மழை கொட்டியது.
இதனால் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நீர் மட்டம் மளமளவென்று உயர ஆரம்பித்தது. மேட்டூர் அணையிலும் இன்று காலை 42.65 அடியாக நீர் உயர்ந்திருந்தது.
இதற்கிடையே பலத்த மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியில் ஒருவர் தெரியாமல் தன் காலை வைத்ததில் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.
பெரம்பலூர் பகுதியிலும் நல்ல மழை பெய்ததால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ந்து போயுள்ளனர்.
கோவையில்...
இந்நிலையில் நேற்று கோயம்புத்தூரிலும் நன்றாக மழை பெய்தது. அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
பெரும் வெள்ளம் காரணமாக திறந்து கிடந்த பாதாளச் சாக்கடைக்குள் ஒரு சிறுமி தவறாக விழுந்து பலியான சம்பவம் இன்றைய தட்ஸ்தமிழ்.காமில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ஊட்டியில்...
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்திலும் நேற்று நல்ல மழை பெய்தது.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களிலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டியுள்ளது.
இதனால் ஊட்டியில் நேற்று வழக்கத்திற்கு அதிகமாக குளிர் நிலவியது.
மதுரையில்...
மதுரையிலும் நேற்று சரியான மழை பெய்துள்ளது.
இதனால் வழக்கம் போல பெரியார் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள சாலையிலும் முழங்காலுக்கும் மேலாக நீர் தேங்கி நின்றது.
இன்று காலை வரை இப்பகுதிகளில் நீர் தேங்கி நின்றது.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications