விபத்தில் இறந்த சென்னை ஆசிரியர்களின் குடும்பத்துக்கு ஜெ. ரூ.50,000 நிதியுதவி
சென்னை:
கடலூர் அருகே நேற்று சாலை விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த 4 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை-திருவெற்றியூரில் உள்ள குமரன் ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா கிளம்பினர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த வேன் மீது எதிரே வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியதில் தங்கமணி, செந்தில்குமார், வெங்கடேசன் மற்றும் சிவக்குமரன் ஆகிய நான்கு ஆசிரியர்களும் தியாகராஜன் என்ற வேன் டிரைவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரக்கம் தெரிவித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த விபத்தில் இறந்த ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேருக்கு தலா ரூ.15,000ம் லேசான காயமடைந்த ஐந்து பேருக்கு தலா ரூ.6,000ம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.