லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்ற 2 டிராபிக் போலீசார் சுற்றி வளைப்பு
கோயம்புத்தூர்:
லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரையும் மற்றொருபோலீஸ்காரரையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் காட்டூர் போலீஸ் போக்குவரத்துப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் விவேகானந்தன்(35). இங்கு ஹரிஹரன் என்பவர் போலீஸ்காரராக உள்ளார்.
இந்த இரண்டு போலீசாரும் சமீபத்தில் கோயம்புத்தூர் 100 அடி ரோட்டில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை இவர்கள் நிறுத்தினர்.
பின்னர் அந்த லாரியில் அதிகமான பாரம் ஏற்றப்பட்டிருப்பதாகக் கூறிய விவேகானந்தன், இதற்காக கேஸ்போடாமல் இருக்க வேண்டுமென்றால் ஆர்.சி. புத்தகத்தைக் கொடுத்து விடு என்று டிரைவரிடம் கூறினார்.
மேலும் ஆர்.சி. புத்தகம் மீண்டும் வேண்டுமென்றால் ரூ.1,500 கொண்டு வந்து கொடு என்றும் விவேகானந்தன்கூறிவிட்டார்.
இதையடுத்து அந்த லாரி டிரைவர் நேராக கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குச் சென்று இதுதொடர்பாகப் புகார் கொடுத்தார்.
உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் சுறுசுறுப்புடன் செயல்பட்டனர். "மை" தடவிய ரூபாய் நோட்டுக்களை லாரிடிரைவரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட போலீசாரிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.
பின்னர் "மப்டி" உடையில் 100 அடி ரோட்டுக்குச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு இடத்தில் மறைவாக நின்றுகொண்டனர். அதன் பிறகு அங்கு வந்த லாரி டிரைவர் நேராக விவேகானந்தனை நோக்கிச் சென்றார்.
டிரைவரை வெகு சந்தோஷமாக வரவேற்ற விவேகானந்தனும் ஹரிஹரனும் அவரிடமிருந்து ரூ.1,500 லஞ்சப்பணத்தை வாங்கிக் கொண்டனர்.
உடனே அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தனர். பின்னர் லஞ்சம்வாங்கிய விவேகானந்தனையும் ஹரிஹரனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
எப்போதும் ஆள் நடமாட்டமும் வாகன நடமாட்டமும் அதிகமுள்ள 100 அடி ரோட்டுப் பகுதியில் லஞ்சம் வாங்கிஇரண்டு போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.