""உழுது விதைப்பவர்க்கு..."": கருணாநிதி கண்டனம்
சென்னை:
உண்மையைச் சொல்லி வருபவர்களுக்கெல்லாம் தமிழகத்தில் இந்தக் கதி தான் போலும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கைது சம்பவம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
நெடுமாறன் கைது சம்பவம் எனக்குத் தெரிய வந்த போது பாரதியாரின் "உழுது விதைப்பவர்க்கு..." என்ற கவிதை வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
தமிழகத்தில் உண்மையை எடுத்துக் கூறி வருபவர்களுக்கெல்லாம் இந்தக் கதி தான் ஏற்படும் என்பதை நெடுமாறன் கைது மூலம் தமிழக அரசு மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் தான் இந்த நெடுமாறன் கைது சம்பவம். நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இந்தப் பிரச்சனையை எழுப்புவார்கள் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து தான் வந்துள்ளனர்.
கடந்த 1989ம் ஆண்டு எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா புலிகளுக்கு நான் உதவவில்லை என்று கூட என்னைக் குற்றம் சாட்டியுள்ளார் என்றார் கருணாநிதி.
மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பனை டிஸ்மிஸ் செய்ய வேண்டு என்று பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளது குறித்து கேட்டதற்கு, ஜெயலலிதாவின் முழு அறிக்கையையும் படிக்காமல் இது பற்றி என்னால் கருத்து கூற முடியாது என்று கருணாநிதி பதிலளித்தார்.