ஜனநாயக படுகொலை: மதிமுக கண்டனம்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்படும் அச்சமான சூழ்நிலை நிலவுவதாக மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சரும் மதிமுக பொருளாளருமான எம். கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டது ஜனநாயகக் கொலையாகும்.
முதலில் வைகோவைக் கைது செய்தனர். இப்போது நெடுமாறனைக் கைது செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்படலாம்.
பேசினாலே கைது செய்யும் கொடுமை இங்கு தான் நடக்கிறது. காலம் மாறும். அப்போது நீதி நிலைநிறுத்தப்படும்.
இலங்கைத் தமிழர்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் ஜெயலலிதா செயல்படுகிறார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அமைதித் தீர்வு கிடைப்பதை அவர் விரும்பவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன என்று கூறியுள்ளார் கண்ணப்பன்.