""தமிழர்களை ஒன்றுபடுத்த சிறை செல்வதில் எனக்கு மகிழ்ச்சியே"": நெடுமாறன்
சென்னை:
உலகில் உள்ள தமிழர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக எனக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் இந்தச் சிறைவாசத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது என்றால் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு புலிகளால் தான் தீர்வு காண முடியும். ஒவ்வொரு தமிழனும் செய்யும் கடமையைத் தான் நானும் செய்துள்ளேன்.
பொடா சட்டத்தில் என்னைக் கைது செய்திருப்பதாக மட்டும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் எந்த வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று எனக்குத் தெரியாது என்றார் நெடுமாறன்.
நெடுமாறன் அறிக்கை:
இதற்கிடையே நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொடா சட்டம் வரும் போதே தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராக அது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம்.
அதன்படியே இப்போது நானும் கைது செய்யப்பட்டுள்ளேன்.
இயக்கத் தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் தங்கள் கடமைகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டிக் கொள்கிறேன். யாரும் எதற்கும் எப்போதும் அஞ்ச வேண்டாம்.
அடக்குமுறைகள் ஒரு போதும் வென்றதாகச் சரித்திரமே இல்லை. உரிமை காக்கும் வீரர்கள் தோற்றதாகவும் வரலாறு சொல்லவில்லை என்று அவ்வறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications