அடுத்தது யார்?
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து யார் மாட்டப் போகிறார்கள் என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு பொதுமக்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மற்ற தலைவர்களும் படிப்படியாகக் கைது செய்யப்படலாம் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி ஆகியோரும் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் தான்.
இருப்பினும் வீரமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் சமீப காலமாக புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர் (பொடா பயம்தான்!).
ஆனால் திருமாவளவன் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். சமீபத்தில் நெடுமாறன் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு அவர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
எனவே, ஜெயலலிதாவின் அடுத்த குறி திருமாவளவனாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திருமாவளவனைக் கைது செய்தால் அது ஜாதி பிரச்சினையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் தமிழக அரசிடம் உள்ளது.
எனவே திருமாவளவன் இப்போதைக்கு கைது செய்யப்பட மாட்டார் என்றே கூறப்படுகிறது. அதே சமயத்தில், நெடுமாறனைப் போல அதிரடியாக அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
அதேபோல புலிகள் ஆதரவுப் பேச்சுக்காக இல்லாவிட்டாலும் கூட தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பேசி வருவதற்காக ராமதாஸ் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா முயற்சிக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.
அடுத்து வரும் நாட்கள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தினாலும் அதில் ஆச்சரியம் இல்லை.












Click it and Unblock the Notifications