வீரப்பனைப் பிடிக்கும் தமிழக அதிரடிப் படை போலீசாரிடம் குறை கேட்டார் ஜெ.
சென்னை:
தமிழகப் போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் 2வது கட்டமாக இன்று மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1,600 போலீசாரிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று குறைகளைக் கேட்டறிந்தார். இவர்களில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 58 அதிரடிப் படை போலீசாரும் இருந்தனர்.
இந்தியாவில் முதல்முறையாக போலீசாரிடம் முதல்வர் குறை கேட்கும் நிகழ்ச்சி கடந்த ஜூலை 26ம் தேதி தமிழகத்தில் நடந்தது. சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயலலிதாவிடம் குறைகளைக் கூற தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1,622 போலீசார் குவிந்தனர்.
பல போலீசார் தங்களின் குடும்பத்தினரையும் அழைத்து வந்து, ஊதிய உயர்வு இல்லை என்று தொடங்கி சிறுநீரகக் கோளாறு வரை பல தரப்பட்ட குறைகளை ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது கட்டமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1,600 போலீசார் தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவித்தனர்.
தலைமைச் செயலகத்தில் இதற்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அவர்களை அழைத்து கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்டு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா பேசினார்.
இந்த 1,600 போலீசாரில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிரடிப் படையைச் சேர்ந்த 58 போலீசாரும் அடங்குவர். அவர்களிடமும் ஜெயலலிதா அக்கறையுடன் பேசி அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் அடுத்தகட்டமாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆகஸ்டு 5ம் தேதியன்றும், சென்னை மாநகரைச் சேர்ந்த போலீசாரிடம் ஆகஸ்டு 7ம் தேதியன்றும் ஜெயலலிதா மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுடைய குறைகளையும் கேட்டறிவார்.