தலால் ஆஸ்மி நிபந்தனை ஜாமீனில் தளர்வு
சென்னை:
குவைத்திலிருந்து காதலர் காதர் பாஷாவுடன் சென்னைக்குத் தப்பி வந்த அந்நாட்டு கோடீஸ்வரப் பெண் தலால் ஆஸ்மிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் கோர்ட்டில், பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியா வந்த குற்றத்திற்காக தலால் ஆஸ்மி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலால் ஆஸ்மி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ஒவ்வொரு மாதமும் ஆலந்தூர் கோர்ட்டில் வந்து ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஜாமீனில் விடுதலையான பிறகு காதர் பாஷாவுடன் ஆந்திர மாநிலம் கடப்பா சென்று விட்ட தலால் ஆஸ்மி, அங்கு வைத்து காதர் பாஷாவைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தலால் ஆஸ்மி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் கடப்பாவிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்னை வருவது சிரமமாக இருப்பதாகவும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறும் அவர் ஆலந்தூர் கோர்ட்டில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை நீதிபதி ஜெகநாதன் விசாரித்தார். பின்னர் 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஜராகினால் போதும் என்று நிபந்தனையை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே நேற்று கோர்ட்டிற்கு வந்திருந்த தலால் ஆஸ்மிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.