சோனியா விழாவுக்கு மைதானம் ஒதுக்க ஜெயலலிதா மறுப்பு
சென்னை:
காங்கிரஸ்-த.மா.கா. இணைப்பு விழா நடத்த மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒதுக்க கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு இன்னும்அதற்கு அனுமதி தரவில்லை.
வரும் 14ம் தேதி இந்த இணைப்பு விழா நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு மிகப்பாதுகாப்பான இடம் ரேஸ்கோர்ஸ் மைதானம் தான் என காங்கிரஸ், த.மா.கா. தலைவர்கள் முடிவு செய்தனர்.
நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்த விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பே இந்த மைதானத்துக்கான கட்டுப்பாட்டு அதிகாரி டேவிதாரிடம் மைதானத்தை ஒதுக்கக் கோரித.மா.கா. தலைவர் வாசன் மனு கொடுத்தார்.
இதை உடனடியாக ஏற்ற டேவிதார் மைதானத்தை ஒதுக்கலாம் என பரிந்துரைத்து அந்த விண்ணப்பம் அடங்கிய பைலைவிளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிதுரைக்கு அனுப்பினார். அந்த பைலில் தம்பிதுரையும் கையெழுத்திட்டு முதல்வருக்குஅனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இதுவரை இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எந்த முடிவும் எடுக்கவில்லை. மைதானத்தை ஒதுக்க இன்னும் அவர் அனுமதிதரவில்லை.
கடந்த இரு வாரங்களாக இந்த பைல் ஜெயலலிதா வசம் உள்ளது.
வி.வி.ஐ.பி. பட்டியலில் உள்ள சோனியா காந்தி இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருப்பவர். அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் ஒருவாரத்துக்கு முன்பே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிடும்.
டெல்லியில் இருந்து ஒரு வாரத்துக்கு முன்பே அதிகாரிகள் வந்து விழா நடக்கும் இடத்தைப் பார்வையிட்டு இப்படித்தான் மேடை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அதன் பின்னர் தான் மேடை அமைக்கும் பணியே தொடங்கும்.
ஆனால், 14ம் தேதி நடக்கவுள்ள விழாவுக்கு ஜெயலலிதா இன்னும் அனுமதி தராததால் த.மா.காவினர் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச த.மா.கா. எம்.எல்.ஏக்கள் சிலர் முயன்றனர். ஆனால், அவர்களைச் சந்திக்கவும் ஜெயலலிதாநேரம் ஒதுக்கவில்லை.